Sunday, July 5, 2009

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைத் தூற்றுதும் திங்களைத் தூற்றுதும் - 5

இருள் நீடிக்கிறது. பிரபஞ்சத்தில் இல்லாத இருள். பிரபஞ்சத்திற்கு நட்சத்திரங்களால் ஒளி உண்டு. இங்கு அதுவும் இல்லை. இங்கு எதுவும் இல்லை. இருள் மட்டும் தான் இருக்கிறது. அதை நிலவால் களவாட இயலாது. இவ்விருள் நிலவின் கைக்கு எட்டாத தூரத்தில். ஆனால் இந்த இருளும் நிரந்தரம் அல்ல. நிலவால் கூட களவாட இயலாத இருளை மின் மினிப் பூச்சிகள் களவாட இயலும். முதன் முறை வெளிச்சத்திற்கு பயப்படுகின்றேன். மின்மினிப் பூச்சிக்கும். அந்த மின்மினிப் பூச்சிகள் மட்டும் இங்கு வந்தால் நான் இனி வெளிச்சமே காண முடியாது எனத் தோன்றியது . நீல மின்மினிகள். ஆம் நீல நிற LED மாதிரி பளிச் என்ற வெகு தூரம் காணக் கிடைக்கின்ற பிரகாசமான நீல நிற மின்மினிகள்.

இப்போது சொல்ல வில்லை என்றால் எப்போதுமே என்னால் சொல்ல முடியாது என எண்ணுகிறேன். கண்ணனின் குரலுக்கு ஏற்ற மனிதன் அல்லாத உருவம் துரத்துவதாய் சொன்னேன் அல்லவா. ஆனால் அதை முழுவதுமாய் மனிதன் இல்லை என்று மறுத்துக் கூற முடியாது. அரை மனிதன். அரை என்றால் உயரத்தில் அல்ல. பரிணாமத்தில். சற்றே குரங்கு என்று சொல்லி விடக் கூடிய அரை மனிதன். அரையில் ஏதுமில்லா அரை மனிதன். புகார் வச்சிரக் கோட்டத்து காபாலிகனையும் கால் தூசி என்று என்ன வைக்கும் கொடுமையான உருவம் கொண்ட இரத்தம் குடிக்கும் காட்டேரி. இரத்தக் காட்டேரி. ஆங்கிலத்தில் Dracula. அவன் வாயில் வீசும் பசும் இரத்தத்தின் கவுச்சி நெடி இன்னும் என் நாசியில் நீடித்து இருக்கிறது. அவன் வாயின் கோரப் பற்களின் வாயிலாக குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவனாய் இருக்கலாம் எனக் கருத வாய்ப்பளித்தான். கண்கள் மிருகங்களுக்கே உரித்தான இருட்டிலும் பளிச் என்று தெரியும் ஒளிமிக்க கண்களாய் இருந்தது. நீளமாய் இருந்தது. ஆனால் மிக நீலமாய் இருந்தது. அவன் எந்நேரத்திலும் வரக் கூடும். அவன் அந்த நீல மின்மினிப் பூச்சிகளைக் கண்களில் ஏந்தி எக்கணமும் வரக் கூடும்.

அதற்கு முன், என் சுமையைக் குறைத்தாக வேண்டும். பையை அருகில் தென்பட்ட ஒரு விழுதில் கட்டித் தொங்க விட்டேன். இன்னும் இருள் இருக்கிறது. கண்களுக்குப் பழகாத இருள்.அரை மனிதனின் கண்களுக்குப் பழக்கப் படாத இருளாகவே நீடிக்க வேண்டும். இருள் நீடிக்கின்றது. இருள் இன்னமும் நீடிக்க வேண்டும். மின்மினிப் பூச்சிகளால் களவாட முடியாத இருளாகவே நீடிக்க வேண்டும். ஆனால் என் கண்களுக்கு எட்டாத ஓடைக் கரையில் சந்திரன் பிரகாசித்துக் கொண்டு தானே இருக்கிறான். அந்த மின்மினிகளுக்கு ஒளியை ஏற்றிக் கொண்டு தானே இருக்கிறான்.

ஒளி பெற்ற மின்மினிகள் ஆறு. ஆறும் ஆல மரத்தை நோக்கி வந்து கொண்டு இருந்தன. பறந்தன அல்லது மிதந்தன. அருகில் மிக அருகில் ஒரு குழந்தையின் சிணுங்கல். "I wanna taste his blood". அதே நாராசமான அமெரிக்க ஆங்கிலம். தமிழ் மழலையின் சங்கீதம் ஆங்கிலத்தில் சிறிதும் துளிர்க்கவில்லை. ஆனால் சங்கீதமாய்க் கேட்டன நான்கு காதுகளுக்கு. மோகினி உரைத்தாள் "Dear, just close your eyes for awhile. I will catch that insect for you". "Darling, Dont open your eyes. Otherwise that insect will trace us and will try to escape." இக்குரல் கண்ணனுடயதாய் இருந்தது. மின்மினிகள் மறைந்தன. (தொடர்ந்து வருகின்றது)...

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைத் தூற்றுதும் திங்களைத் தூற்றுதும் - 4

வானம் இருண்டு இருந்து. கோபுர தீபம் அணைந்தாலும் ஆலயத்தின் பள்ளியறை தீபம் மட்டும் இன்னும் அமிழ்த்தப் படவில்லை. நிலவு முன்னைக் காட்டிலும் இன்னும் பிரகாசமாய் அதி பிரகாசமாய் ஜொலித்துக் கொண்டு இருந்தது. பால் நிலவு, நிலாச் சோறு எல்லாம் அர்த்தம் அற்றதாகி இருந்தது. தலைவனைப் பிரிந்த தலைவி பாலை நிலவைப் பாழ் நிலவே என வர்ணித்தது மட்டும் ஏனோ அர்த்தம் செறிந்ததாய்த் தோன்றியது. இருந்த வெளிச்சமும் நிலவினுடயது. வெயிலுக்கு பயந்து பாம்பின் பட நிழலில் ஒதுங்கிய தவளையின் கதை ஏனோ நினைவில் வந்து உறுத்தியது. ஏன் இந்த எண்ணம். பாம்பும் நிலவும் எப்படி ஒன்றாக முடியும். இருவரும் பரம எதிரிகள் என்று இலக்கியமும் அம்மாவும் கூட சொல்லி இருக்கிறார்கள். ஒரு வேளை நாக பூஷண சந்திர மௌலியாகிய சிவன் சமரசம் செய்து இருப்பரோ. இப்பொழுது கடவுளையும் நான் நம்புவதாய் இல்லை. எனக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை மோகினி தான். அவள் தான் என்னைக் காப்பாற்றுவாள்.

ஆம். காப்பாற்றினாள். நான் கரையில் ..ஓடையின் அக்கரையில்... மோகினியின் அக்கறையில்... நிலவின் ஒளி ஓடை நீரை இரத்தமாய் மாற்றிக் காண்பித்தது. அது இரத்தம் தானா என்று ஊர்ஜிதம் செய்ய நான் விரும்ப வில்லை. அதோ அந்த ஆல மரம் வாரல் என்பன போல் மறித்துக் கை காட்டிற்று. அந்த மோகினி அந்த மரத்தின் பின் சென்று தானே மறைந்தாள். ஒரு வேளை அது அவள் தற்கொலை செய்த இடமாய் இருக்குமோ. ஒரு வேளை அவள் மோகினியாய் இல்லாமல்லிருந்தால்? நான் அம்மரத்தை நோக்கியே செல்வது எனத் தீர்மானித்தேன். ஆனால் நான் கேட்பது என்ன?

"He is there"ஒரு ஆண் குரல் . "Let him come out of the stream" இது பெண்.

முதலில் ஒலித்தது கண்ணன் குரல். அடுத்தது மோகினி. அவர்கள் இங்கே தான் இருக்கிறார்கள். மிக அருகில். நான் ஓடையில் இருந்து வெளியே வரக் காத்திருக்கிறார்கள். கண்ணனை சந்திக்கும் ஆவலில் வேகமாய்.. அந்தக் குரல்கள் எண்ணி இருக்காத வேகத்தில்.. ஓடையில் இருந்து எகிறிக் குதித்து வெளியேறினேன். குரல் வந்த திக்கில் உள்ள ஒரு மரம் சலசலத்தது.

கண்ணனின் குரல் கண்ணனின் உருவத்திற்குப் பொருந்தவில்லை என்றேன் அல்லவா. இதோ இங்கே என் கண் முன் ஓடி வரும் உருவத்திற்கு கச்சிதமாய்ப் பொருந்தும். ஆனால் அந்த உருவம் ஒரு மனிதனுடயது இல்லை. நான் அதைப் பற்றி விளக்கம் கொடுத்துக் கொண்டு நின்றேன் என்றால் அது என்னைப் பற்றி இழுத்துக் கொண்டு ஓடி விடும். நான் அங்கு நிற்கவில்லை. அதோ அந்த ஆல மரத்தை நோக்கி ஓடிக் கொண்டு இருக்கிறேன். மூச்சிரைக்க. என் பயணப் பையுடன். அந்த ஆலமரம் தான் எனக்கு நிம்மதி தரும் என, எந்த விதமான நிம்மதி என அறியாமல்... (தொடர்கிறது...)

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைத் தூற்றுதும் திங்களைத் தூற்றுதும் - 3

வானில் சூரியன் சுத்தமாய் இல்லை. மேகங்கள் மறைத்து இருக்கிறது என்றால் சூரியனை மறைத்த மேகம் ஏன் நிலவை மறைக்கவில்லை. இது அந்தி வேளை என்றாலும் சூரியன் மறைய வில்லை என்பதை அங்கே சூழ்ந்து இருக்கும் வெளிச்சம் வெளிச்சம் போட்டு காட்டியது. கிரகண காலத்து சீதோஷணம் நிலவியது. முன் பனிக் காலத்து சிலீரென்ற காற்று தொடர்ந்து மேலே பட்டுக் கொண்டு இருந்தது. கிரகண காலங்களில் அம்மா வெளியே போகக் கூடாது என்று சொல்லுவாள். அவள் காரணம் ராகு கேது என்ற இரு நாகங்களின் விடம் சூழலில் சூழ்ந்து இருக்கும் என்பதே. நான் கற்ற விஞ்ஞானமோ "uv கதிர்கள், பாக்டீரியா, நுண் கிருமிகள்" என்று பலவற்றுக்கும் முடிச்சு போட்டது. எவ்வாறாயினும் இவ்வேளையில் வெளியே இருப்பது சரி அல்ல என்று பட்டது. சமீபத்தில் கிரகணம் வருவதாய் எந்த செய்திகளிலும் சொல்ல வில்லை.

முழு நிலவை கண்டால் கடல் கொந்தளிக்குமாம். பைத்தியங்களுக்கு பித்தம் தலைக்கு ஏறுமாம். எனக்கு நிலவைப் பார்க்க பயமாய் இருந்தது. சினிமாவின் உச்ச கட்ட கட்சி போல் ஓடிச் சென்று "I love you" என்று சொல்லி விடுவது என்று முடிவெடுத்தேன். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் அவளைக் காணவில்லை. எந்த திசையில் செல்ல என்று தெரிய வில்லை. முன்பு நின்ற இடமாவது எப்படியாவது ஊர் போய்ச் சேர்வோம் என்று நம்பிக்கை அளித்து. இவ்விடம் நாலா புறமும் விடத்தை உறிஞ்சி வைத்துக் கொண்டு உமிழக் காத்துக் கொண்டிருந்தது.

நாங்கள் வந்த பாதையை நோக்கி கவனத்தைத் திருப்பினேன். சிறிது தூரத்தில் ஓடை ஒன்று மாநகராட்சிக் குழாய் உடைந்து தண்ணீர் உகுப்பது போல் சிறு ஓசையுடன் ஓடிக் கொண்டு இருந்தது. தார் சாலை எப்பொழுதோ முடிந்திருக்க, மணல் சாலையை ஈரமாக்கியவாறு ஓடை நீர் ஓடையின் பாதையிலிருந்து விலகி சாலையில் ஓடி வந்து கொண்டு இருந்தது. இதனால் நானும் அந்தக் க்ராதகியும் வந்த வண்டியின் தடம் தெளிவாகத் தெரிந்தது. நல்லது. இதே வழியில்.. இந்த தடத்தைப் பார்த்தவாறே சென்று விடலாம் என்று திரும்பி நடக்க ஆரம்பித்தேன். சிறிது தூரம் நடந்து வந்து மற்றோர் ஓடையின் அருகில் இருந்து திரும்பிப் பார்த்தேன். என் காலடித் தடங்கள் அந்த சகதியில் தெளிவாய்த் தெரிந்தன.

இன்னும் சற்று தூரத்தில்.. அதாவது நான் இறங்கிய இடத்தில் காலடித் தடங்கள் மறைந்து வண்டியின் சக்கரத் தடங்கள் ஆரம்பமாயின. எனது புத்தியில் சட்டென்று ஒன்று உறைத்தது. அவள் வண்டியில் எந்தப் பக்கமும் திரும்பாமல் நேராகச் சென்றாள். அப்படி ஆயின் என் காலடித் தடத்துடன் வண்டியின் சக்கரத் தடங்களும் இருக்க வேண்டுமே. அவள் அங்கிருந்து மறைந்து போகவில்லை. வண்டியில் செல்வதை நான் என் கண்களால் கண்டேனே.

ஓடை நீர் தடத்தை அழித்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பலனை குற்றம் சுமத்தப் பட்டிருக்கும் சூழலுக்கு சாதகமாக்கி எனக்குள் தீர்ப்பு எழுதிக் கொண்டேன்.
அடுத்து என்ன? அவள் இதே சாலையில் இதோ இந்த ஓடைக்குள் இறக்கி அக்கரை சென்று அப்பால் மறைந்ததைக் கண்டிருந்தேன் அல்லவா. ஓடையில் இறங்குவது என்று முடிவாயிற்று. உடைகளைச் சுருட்டி விட்டுக் கொண்டு பையைத் தோள்களில் ஏற்றிக் கொண்டு நீரில் இறங்கினேன். நீர் அந்தக் குளிரிலும் அந்த சூழலுக்கு பொருந்தாத மிதமான சூட்டுடன் இருந்தது. ஓடை நான் எதிர் பார்த்ததை விட ஆழமாகவே இருந்தது. நான் முட்டளவு நீரில் நின்று கொண்டிருந்தேன். அவள் சென்ற பொது இந்த ஆழம் இல்லையே. இந்த ஆழத்தில் நான்கு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாதே. நான் அவளை மோகினிப் பிசாசு என்றே முடிவு செய்து கொண்டேன். நீரின் வேகம் அதிகமாயிற்று. என் கால்கள் நீரில் இழுக்கப்பட்டன. முட்டளவு நீரில் கால்கள் இழுக்கப் படுவதாவது? அனால் அது பிரமை இல்லை. அந்த மோகினிப் பிசாசு என்னை இங்கு அழைத்து வந்தது என்றால் எதாவது ஒரு காரணம் இருக்க வேண்டும். அதற்காகவாவது நான் பிழைப்பேன் என்று நம்பினேன். பிழைத்தேன்.... (தொடரும்)