Monday, January 4, 2010

இங்கொரு விழாத் தொடக்கம் - 1

எதிர்பாராமல் தள்ளப் பட்ட இந்திரசேனன் சுதாரித்த போது ஒரு படகில் கடலில் போய்க் கொண்டு இருந்தான். விடிவதற்கு இன்னும் சில நேரங்களே இருக்கும். வெள்ளி முளைத்திருந்தது. அவனுடன் இன்னும் பல வணிகர்கள், அரச குடும்பத்தினர், பாமரர்களும் படகில் இருந்தனர். மார்கழி மாதத்தின் முன் பனி தன் பணியை செவ்வனே செய்தது. கைகளை தண்ணீருக்குள் வைத்தான், சற்றே வெது வெதுப்பாய் இருந்தது. பயணிகளில் பலர் அரை உறக்கத்தில் இருந்தனர். பெரும்பாலனவர்களிடம் பயணச் சுமை என்று எதுவும் இல்லை. வைத்திருந்தவர்களும் ஓரிரு மூடைகள் மட்டுமே வைத்திருந்தனர். படகில் இருவர் துடுப்பு வலித்துக் கொண்டு இருந்தனர்.

"விஷயம் தெரியுமா? மஹா அழியாப்புலத்திற்கு நேற்றிரவு வந்து விட்டாராம். மன்னர் புரந்தரன் அவரை நேரே சென்று வரவேற்று உபசரித்தாராம்." யாரோ ஒரு யவனர் பேசிக் கொண்டு இருந்தார். "மெதுவாகப் பேசு. யாரேனும் கேட்டால் விபரீதமாகி விடும். உனக்கு எப்படி இது தெரியும்" மற்றொரு யவனர். "மதுர மொழி தெரிந்தவர் யாரும் இங்கு இருக்க வாய்ப்பில்லை. பயம் வேண்டாம். நீயும் மதுர மொழியிலேயே பதிலளி. இங்கு வர அழியாப்புலம் விண்வெளி நிலையத்தில் காத்திருந்த போது புரந்தரனிடம் வேலையில் இருக்கும் என் உறவினனைச் சந்தித்தேன். அவன் தான் கூறினான்." 'ஓஹோ புரந்தரன் பேசிய மொழி மதுர மொழியா' ... "மகாவிற்கு மதுரமொழி தெரிந்ததால் சில வினாடிகளிலேயே அவர்கள் சந்திப்பு நிறைவடைந்து விட்டதாம். அதன் பின் என்ன நடந்தது என்று யாருக்குமே தெரியவில்லை." "மிக அதிக வேகத்தில் வார்த்தைப் பிரயோகம் உள்ள மொழி மதுர மொழி என்பது தெரிந்ததாயிற்றே. அதனால் தானே அதற்க்கு இத்தனை பெயரும் புகழும். மேலும் என்ன கூறினான் உன் உறவினன்?" 'அதனால் தான் கதையை சில நொடிகளில் முடிக்க முடிந்ததா?'

"ஏதோ ஒரு பெண்ணின் சடலம் விண்கலத்தில் கிடைத்ததாகவும் அது பற்றியே அவர்கள் உரையாடல் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறானாம். மஹா வந்த செய்தி மட்டுமே ஊடகத் துறைக்கு தெரிவிக்கப் பட்டுள்ளதாம். வேறு எதுவும் இப்பொழுது வெளியிடும் எண்ணம் இல்லையாம்." "இப்பொழுது எங்கு இருக்கிறார் மகா?" "தெரியவில்லை". "சரி இதோடு விட்டு விடுவோம். நீங்கள் முதல் முறை புகார் வருகிறீர் அல்லவா. வியப்பில் வாயடைத்துப் போகப் போகிறீர்." "அப்படியா.. இன்னும் எவ்வளவு தூரம் இருக்கும் உங்கள் புகார் நகரம்." "அடத்தம்பி.. விடிவதக்குள் கழிமுகத்தீவை அடைந்து விடுவோம். இந்தத் தீவு காவிரி கடலோடு கலக்கும் கழிமுகத்தில் இருக்கும் ஒரு காயல் பிரதேசம். கழிமுகத்தில் உள்ள எல்லா தீவுகளையும் மரப் பாலங்களால் இணைத்து ஒரே தீவாக மாற்றியிருக்கிறார்கள் புகார் வாசிகள். இந்த மரப்பாலங்கள் அல்லாது படகுகளும் தீவுக் கூட்டங்களை ஒன்றிணைக்கின்றன.

புகார் நகருக்கு வடபுறம் அலையாத்திக் காடுகளும், தெற்க்கே மணல் குன்றங்களும் இருக்கின்றன. இவற்றுக்கு இடையில் கரையில் இருந்து சுமார் 15 கல் தொலைவிற்கு இந்த தீவுக் கூட்டங்கள் பரந்து கிடைக்கின்றன. யவனர்களுக்கு என்றே உருவாக்கப் பட்ட இந்த தீவு மருவூர்ப்பாக்கத்துடன் அதிவேகப் படகுகளால் இணைக்கப் பட்டுள்ளது. இங்கிருந்து நகரத்துக்கு செல்ல நகர நாயகரின் அனுமதி பெற்றே செல்ல முடியும். இந்தத்தீவில் நடக்கும் அனைத்து கொடுக்கல் வாங்கல் விவகாரங்களுக்கு சுங்கம் வசூலிப்பதில்லை. பன்னாட்டு வணிகர்களின் வரவை ஊக்குவிக்கவே இந்த ஏற்பாடு. உள்ளூர் வணிகர்கள் சுங்கம் செலுத்தி நகருக்கு கொண்டு செல்வர்.

வெளி நாட்டு பயணிகள் முதலில் இறங்குவது இந்த தீவில் தான். மக்கள் போக்குவரத்து கண்காணிப்பாளர் மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் அனுமதி பெற்ற பின் தனி படகில் நகரத்திற்கு கொண்டு செல்லப் படுவர். நாம் கழிமுகத் தீவை நெருங்கி விட்டோம் என்று தெரிகிறது." "ஆம் ஏதோ ஒரு கரை தெரிகிறது". மிக அருகில் சற்றே ஆரவாரமிக்க கடற்கரை தென்பட்டது. சிறு வியாபாரிகள் படகை எதிர் நோக்கி காத்திருந்தார்கள். துடுப்புகள் அல்லாது அலைகளும் படகை கரையில் கொண்டு சேர்க்க துணை வந்தன. படகோட்டி படகில் இருந்து சிறு வடம் ஒன்றை கரையில் எறிந்தான். சூரியன் எழ இன்னும் நேரம் ஆகும் என்று தெரிந்தது. படகோட்டிகள் கடலில் இறங்கி படகை தள்ளினர். வியாபாரிகள் மற்றும் சுமை தூக்குவோர் படகை சூழ்ந்து கொண்டனர்.... (தொடரும்)...