Tuesday, August 18, 2009

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைத் தூற்றுதும் திங்களைத் தூற்றுதும் - 10

சூரியன். சூரியன் தன் ஏழு குதிரைகளுள் மஞ்சள் வண்ணக் குதிரையை மட்டும் முன்னால் விட்டு வேகமாக விரட்டிக் கொண்டிருந்தான். சற்று நேரம் வரை முன்னால் வந்து கொண்டிருந்த சிவப்பு நிறக் குதிரை களைத்து மெதுவாக பின் வாங்கிக் கொண்டிருந்த காலை நேரம். இரு குதிரைகளின் தேஜஸ் நிலத்தைப் பொன்னிரமாக்கிக் கொண்டிருந்தது. வானமாகிய பொற்கொல்லன் ஏதேனும் தங்கம் கிடைக்குமா என்று மேகத்தை சல்லடை ஆக்கி சலித்துக் கொண்டிருந்தான். அவனது உத்வேகத்தைப் பார்த்தால் அவன் தன் முயற்சியில் இன்னும் சில நேரத்தில் வென்று பொன்னைப் பிரித்து வெண்ணொளி மட்டும் பூமியை வந்து அடையும் படி செய்து விடுவான்.

ஆனால் பெய்லீ நின்றிருந்த இடம் மட்டும் இருளாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது. அவன் ஓடையின் மறு கரையில் நின்று இருந்தான். ஓடையின் மறு புறம் முழுவதும் இன்னும் விடிய வில்லை. அவனால் ஓடையை கடந்து வர முடியாது என்பது முந்தைய இரவு நிகழ்ச்சிகளால் உறுதிப் படுத்தப் பட்டு விட்டதால் நான் சலனமற்று இருந்தேன். அவனது தாய் தந்தையை இழந்த துக்கமும், அதற்கு காரணமான என் மீதான கோபமும் அவனது முகத்தில் தெரிந்தது. அவனது பார்வையை தவிர்க்க எண்ணி மறுபுறம் முகத்தைத் திருப்பினேன்.

நேற்று இருட்டில் பார்த்ததால் விளங்காத அவ்விடத்தின் நில அமைப்பு இப்போது நன்றாக தெரிந்தது. நேற்று இரு இணை ஓடைகளாக எண்ணி இருந்த நீர்நிலை வட்டமான அகழி என்பதும், அதில் இருந்த நீர் சிவப்பு நிறத்தில் இருப்பதும் , நான் இருப்பது அந்த அகழியால் சூழப்பட்ட சதுப்பு நிலப் பரப்பு என்பதும் புலனாயிற்று. நான் இருந்த நிலப் பரப்பு பகலாகவும் அகழியின் மறுபுறம் இருளாகவும் இருந்தது. நேற்று குறுகிய கால இடைவெளியில் ஏற்பட்ட தட்ப வெப்ப நிலை மாற்றம் காலத்தால் அன்று இட மாற்றத்தால் என்பது புரிய எனக்கு அதிக நேரம் எடுக்க வில்லை.

நான் அகழியால் சூழப்பட்ட பகுதியால் இருப்பதால் கால்நடையாக இங்கிருந்து வெளியேறுவது என்பது நடக்காத காரியம். யார் உதவியும் இல்லாமல் இங்கிருந்து வெளியேற முடியாது. எனவே அங்கேயே காத்திருப்பது என முடிவு செய்தேன். கால் இன்னும் ஈரமாகவே இருந்தது. குனிந்து பார்த்த போது காலில் சிவப்பு நிற சாயம் ஒட்டிக் கொண்டிருந்தது. இது பட்டு தான் டைசியா இறந்திருக்க வேண்டும். இந்த நிலப் பரப்பு முழுவதும் இந்த சிவப்பு நிற நீர் சகதியாக கிடந்தது. எனது தொடைப் பகுதியிலும் இந்த சிவப்பு நிற சாயம் ஒட்டிக் கொண்டிருந்தது. நான் சித்ராங்கதாவின் வண்டியில் பையை மடியில் வைத்துக் கொண்டு வந்த போது பட்டிருக்க வேண்டும். அப்படி என்றால் கண்ணன் இறக்கி விட்ட இடமும் இதே போல் சிவப்பு நிற சாயம் படர்ந்த இடமாகவே இருக்க வேண்டும்.

இப்படி யோசிக்க யோசிக்க எதாவது வந்து கொண்டே இருக்கும். ஆனால் புத்தகத்தில் என்ன இருக்கிறது என தெரிந்து கொள்ளும் ஆவலில் யோசனைக்கு தற்காலிக முற்றுப் புள்ளி வைத்து விட்டு புத்தகத்தை திறந்து படிக்கலானேன். .. (தொடரும் அடுத்த பாகத்தில் ).....