Sunday, November 22, 2009

புத்தகம் புகுந்த கதை - 3

ஆராய்ச்சிக் கூடத்தின் மையப் பகுதி இருபத்து நான்கு மணி நேரமும் காமெராவினால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. காமெராவின் கேசட் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றப்படும். மே மாதம் 22 ஆம் தேதி காலை 4 மணிக்கு புதிய கேசட் மாற்றப்பட்டு ஓடிக் கொண்டு இருந்தது. 4:10 க்கு ஏதோ ஒரு மோட்டார் வாகனத்தின் சத்தத்தை தொடர்ந்து சித்ராங்கதா ஹரி என்னும் கால்கரி பல்கலைக்கழக மாணவி உள்ளே நுழைகிறார். அவரைத் தொடர்ந்து அதே பல்கலைக் கழக மாணவர் கண்ணன் வாசுதேவனும் உள்ளே நுழைகிறார். அந்தப் பெண் நேராக அந்தக் குரங்குகள் அடைக்கப் பட்டிருக்கும் கூண்டை நோக்கி செல்கிறாள். அதன்பின் கேசட்டில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக நடந்தவை எதுவும் பதிவாகவில்லை.

"ஒரே இருட்டு. மூன்றாக மடிக்கப்பட்டு இருந்த உடல் மெல்ல விரியத் தொடங்குகிறது. மூச்சு அடைக்கின்றது. என்னை மூழ்கடித்திருந்த நீரின் மட்டம் படிப் படியாக குறையத் தொடங்கியது. என் உடல் உந்தி வெளிய தள்ளப் பட்டது. எனக்கு அழ வேண்டும் என்று தோன்றியது. நான் அழத் தொடங்கினேன்."

சரியாக ஆறு மணிக்கு அடுத்த கேசட் பதிவு செய்யும் நேரத்தில் அந்தப் பெண் அங்கில்லை. கண்ணன் மட்டும் தன் கையில் ஒரு துணிப் பொட்டலத்தை எடுத்துக் கொண்டு கூடத்தை விட்டு வெளியேறுகின்றான். ஆனால் ஆராய்ச்சிக் கூடத்தின் எந்தப் பொருட்களும் களவாடப் படவில்லை.

ஆராய்ச்சிக் கூடத்தை சோதனை செய்த போது அவர்களின் கை ரேகைகள் மட்டும் சிக்கின. கமெராவில் கண்ட அடையாள அட்டையை வைத்துக் கொண்டு விசாரித்ததில் கால்கரி பல்கலைக்கழகத்தில் அவர்கள் இருவரும் படிக்க வில்லை என்பதும் அவர்களின் அடையாள எண் உண்மையானது அல்ல என்றும் கண்டறியப் பட்டது. அவர்கள் யாரென்று தொடர்ந்து விசாரணை நடை பெற்று வருகின்றது

இந்த சம்பவத்திற்குப் பிறகு பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. அந்தக் குரங்குகளின் சிறப்பு அம்சங்கள் மறைந்திருந்தன. அவை ஒலி எழுப்பும் சக்தி இழந்திருந்தன. பார்ப்பதற்கும் சாதாரண சிம்பன்சி குரங்குகளை ஒத்திருந்தன. இரு குரங்குகளின் கண்களும் மஞ்சள் நிறம் படர்ந்து மங்கி இருந்தன. பின்னர் அவற்றின் ஜீன்களை ஆராய்ந்த போது சாதாரண சிம்பன்சியிடமிருந்து அவை எந்த அளவிலும் உயர்ந்தது என்று படவில்லை. துரதிர்ஷ்ட வசமாக அக்குரங்குகளிடம் இருந்து எடுத்து வைக்கப் பட்டு இருந்த உரோமங்களும், குருதி மாதிரியும் காணாமல் போய் இருந்தன.

இதை விடவும் திடுக்கிடும் மாற்றங்கள் அவற்றின் உடலில் நிகழ்ந்திருந்தன. அவை...

புத்தகம் புகுந்த கதை - 2

இந்த சிம்பன்சிகள் மனித உருவத்திற்கு மிகவும் நெருங்கிய வடிவினதாய், ஒரு குறிப்பிட்ட சங்கேத மொழி பேசும் தன்மை கொண்டனவாய் இருந்தன. இவற்றின் ஜீன் கூறுகளை ஆராய்ந்து அறிவது மனித ஜினோம் ஆராய்ச்சியின் மைல்கல் என உணர்ந்த ஆராய்ச்சிக் கூடத்தினர் தலைமையகத்திற்கு இதைப் பற்றிய தகவல்கள் அடங்கிய கோப்பு ஒன்றை அனுப்பி வைத்தனர். இந்த குரங்குகளின் குருதி மாதிரிகளும், உரோமங்களும் ஆராய்ச்சிக்கென தனியே எடுக்கப் பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன.

இந்தக் குரங்குகளின் பிறப்பிடம் தொடர்ந்து சர்சைக்குள்ளன விஷயமாகவே இருந்து வந்தன. முதலில் ஆப்ரிக்காவில் இருந்து வரும் கப்பல்கள் ஏதேனும் ஒன்றில் இவை வந்து இருக்கலாம் என்று கருதப் பட்டு வந்தது. ஆனால் பின்னர் நடந்த ஆராய்ச்சியின் முடிவுகள் சிறிது சந்தேகத்தைக் கிளப்பின. ஆண் குரங்கின் இரத்தத்தை பரிசோதனை செய்த பொது அது ஒரு பெயரிடப்படாத ஃப்ளு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இந்த காய்ச்சலுக்கான கிருமிகள் பற்றி மெடிக்கல் கவுன்சிலில் விசாரித்ததில் இது மத்திய அமெரிக்காவில் மிருகங்களிடம் எட்டு வருடங்களுக்கு முன் பரவி வந்த புதிய வகை காய்ச்சலுக்கான கிருமிகளுடன் ஒத்துப் போனது தெரிய வந்தது. இதன் மூலம் இவை அப்பகுதியில் வாழ்ந்து இருக்கக் கூடும் என சந்தேகம் கிளம்பியது.

இந்த நோயால் பதிக்கப் பட்ட விலங்குகள் கூட்டம் கூட்டமாக இறந்ததும் பின் எல் சல்வடார் அரசின் தலையீட்டால் பல விலங்குகள் குணப்படுத்தப் பட்டதும் தெரிய வந்தது. இந்த ஆண் குரங்கு அப்போதில் இருந்தே இந்த கிருமியால் பதிக்கப் பட்டிருந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். ஆனால் இதனால் இந்த குரங்குக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அபாரமாய் இருந்தது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியது. இதன் பின்னர் பெண் குரங்கை ஆராய்ந்ததில் எவ்வித கிருமி தக்குதலுக்குண்டான அறிகுறியும் தெரியவில்லை. ஆனால் அது கர்ப்பமாக இருந்த விஷயம் வெளிப்பட்டது. மேலும் மேலும் வெளிப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் அதிசயத்தைக் கொடுத்துக்கொண்டு இருந்த வேளையில் ஆராய்ச்சிக் கூடத்தினர் தலைமையகத்தின் முடிவுக்காக காத்துக் கொண்டிருந்தனர்.

இந்த சமயத்தில் தான் புத்தகத்தின் முகப்பில் காணப்படும் இருவரும் சம்பவ தினத்தன்று ஆராய்ச்சிக் கூடத்தில் நுழைந்தனர். அன்று ஏற்பட்ட நிகழ்வைப் பற்றிய குற்றப் புலனாய்வு துறை சமர்ப்பித்த அறிக்கையிலிருந்து....