Tuesday, February 16, 2010

இங்கொரு விழாத் தொடக்கம் - 6

முந்தைய நாள் முடிந்திருந்த வில் விழாவின் எஞ்சிய சுவடுகள் போல வில்களாய் வளைந்திருந்தன வேல மரங்கள் அந்த வில்லின் நாண் போல அகன்று, பரப்பிய புது மணலின் நெகிழ்வால் எந்த நேரமும் அம்புகளை எய்யக் காத்திருந்தது வணிகர் வீதி. இந்த விற்களை நிலத்தில் இருந்து நோக்கும் புகார் நகரத்தவருக்கு காரிகையர் விழிகளை ஞாபகப்படுத்தலாம். ஆனால் வானில் இருந்து வில் முனையை எதிர்கொள்ளும் சூரியன் வெளிறித் தான் போயிருந்தான். எந்த நேரத்திலும் அம்புகள் புறப்படக் கூடும் என்று பயந்து மேகக் கேடயங்களால் உடல் மறைத்து நடுங்கி நின்றான். பயந்தவர் தலை எப்போதும் கீழ் நோக்கியே தொங்கிக் கொண்டு இருக்கும், ஆனால் சூரியனுக்கு ஆபத்தே கீழ் திசையில் எனும் போது? ஆயினும் அவனை விடவும் கருத்தோடு இருக்க வேண்டியவர் புகார் வணிகரேயாம். ஏனெனில் அவர்கள் காண்பதோ காரிகையர் விழிகளையல்லவா? வெயிலவன் பயந்ததற்கு அது ஒன்று மட்டுமே காரணம் அல்ல, அவனும் வண்ண விழி வில்லை எதிர் திசையில் கண்ணுற்றிருந்தான். கரு விழி மாதரே மதி மயக்கும் போது, வண்ண விழியாள் வெயில் மயக்க மாட்டாளா? மாதர் தம் வில் விழி கவசங்களையும் துளைக்க வல்லதல்லவா? இதோ இன்னும் சிறிது நேரத்தில் மேகக் கேடயங்கள் உருகி துண்டங்களாகி புகாரின் மேல் விழப் போகின்றன. உச்சி மீதி வானிடிந்து வீழ்ந்தாலே பயம் கொள்ளாத் தமிழர்கள் மேகம் வீழ்வதற்கா பயம் கொள்வர்? எம் குலச் சிறார் இதோ வந்தது 'ஆலங்கட்டி' என்று குதித்து விளையாடப் போகுவர். ஒவ்வொரு இந்திர விழாவிற்கு யார் வரத் தவறினாலும் இந்திரனின் மூத்த தமையன் வருணன் வரத் தவறியதில்லை.

ஆலங்கட்டிகள் ஒவ்வொரு வீட்டின் முற்றத்திலும் விழுகிறதோ இல்லையோ நிச்சயம் ஆலமுற்றதில் விழும். வானத்தில் இருந்து விழும் மழைத்துளி நிச்சயம் ஆலம் விழுதோடு ஒப்பிடத் தக்கது தான், ஆனால் என் இந்த ஆலங்கட்டி மழை மட்டும் ஏன் இந்த பெயர் பெற வேண்டும்? மழை விழுதென்றால் விழுவது விதை எனக் கொண்டு கிடைக்கும் கட்டிகள் ஆலங்கட்டிகள் ஆகினவோ? ஒவ்வொரு வருடமும் நாவாய் பாம்பை முழங்கியதும் ஆலமுற்றத்து கடலோன் கோட்டத்தின் முற்றம் ஆலங்கட்டிகளால் நிரப்பப் படும். இன்று சற்றே தாமதம் போலும், எந்த நேரமும் வரலாம் என்று எதிர் பார்க்கப்பட்டது. இந்த எதிலும் மனம் கொள்ளாமல் சாலையில் நின்ற தந்தையின் மீது இந்திரசேனனின் கண்கள் குத்திட்டு நின்றன. தந்தையார் இந்திரசேனனை வரவேற்க வாசல் வரை வருவார் என்று நிச்சயம் எதிர்பார்த்திருந்தான் மாற்சிம்மன். உடன் முதன்மை வீதி மாளிகை அம்மையாரும் வந்திருந்தார். அந்த அம்மையாரைப் பார்த்ததும் ஆச்சர்யம் படர விட்ட இந்திரசேனனின் கண்கள், அவன் பேசிய மொழியை விட அதிக கருத்துக்களை அவ்வம்மையாருக்குத் தெரிவித்திருக்கக் கூடும். தந்தையும் அயல் நாட்டு வணிகரும் பேசிக்கொள்ளும் அந்த அதிவேக மதுர மொழியில் மூவரும் பேசிக் கொண்டனர். மறுபடியும் 'புரந்தரன், அழியாப்புலம்' போன்ற வார்த்தைகள் மட்டுமே அதிகம் தெறித்தன. அவர்கள் பேசிய தொனியில் இந்திரசேனன் மிகுந்த குழப்பத்தில் இருப்பதாகவும், மற்ற இருவரும் அவனுக்கு இயன்ற மட்டிலும் விளக்கம் சொல்லிக்கொண்டு இருப்பதாகவும் யூகித்தான். இந்திரசேனனின் குழப்பம் குறையவில்லை, அவர்கள் பேச்சு அவனது குழப்பத்தை அதிகரித்தது. மற்றவர்கள் கவனிப்பதை உணர்ந்த இருவரும் பின்னர் பேசிக் கொள்ளலாம் என உள்ளே நுழைந்தனர். இதற்குள் தாயார் மங்கல ஆரத்தி, காப்பு, கழிப்பு முதலியனவற்றை செய்து முடித்திருந்தார்.

உள்ளே நுழைந்ததும், தந்தையும் இந்திரசேனனும் தந்தையின் தனி அறைக்குள் சென்று விட்டனர். பின்னர் காலை உணவிற்கு சந்தித்த போது தான் மறுபடியும் இந்திரசேனனை சந்தித்தான். அதுவரை மதுரமொழியில் பேசியவர்கள் திடீரென்று குறுந்தமிழில் பேச ஆரம்பித்தனர். குறுந்தமிழ் என்பது மிகக் குறைவான தமிழ்ச் சொற்களைக் கொண்ட, அதிக இலக்கண விதிகளுக்கு உட்படாத, மருவிய சொற்கள் மற்றும் பிறமொழிச் சொற்கள் அதிகம் விரவி வருவதும் ஆகும். சில வருடங்களுக்கு முன்பு தான் தந்தை அந்த மொழியை எனக்கு பயிற்றுவிப்பதற்காக மொழிப்பெயர்ப்போர் வீதியில் இருந்து ஒருவரை வரவழைத்து கற்றுத்தந்தார். இம்மொழி தமிழ் கற்றுக்கொள்ள சிரமப் படும் அயல் நாட்டு வணிகர்கள் பேசும் குறைத் தமிழ் என்று கூறியிருந்தார். ஆயினும் இது வரை யாரும் அவனிடம் அந்த மொழியில் பேசியதில்லை. மதுரமொழியைக் கற்றுவிக்காத தந்தை இந்த மொழியை பயிற்றுவித்ததன் நோக்கம் இதுதானா? இந்த மொழியை இந்திரசேனன் சரளமாக பேசினான், சிறிது நேர உரையாடலுக்குப் பின் "மாற்சிம்மா.. உனக்கு இந்த பாஷை தெரியும். இனி இந்திர சேனனிடம் இந்த பாசையிலேயே பேசலாமே. இந்திரசேனா.. இனி உனக்கு பயமில்லை தானே?" என்று தந்தையார் கூறிச் சிரித்தார். மிகுந்த காலமாக உண்ணாதவன் போல் ஆர்வத்துடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். இந்திர விழாவின் ஆரம்ப நாளாதலால் அரிசி உணவு சமைக்கப் பட்டிருந்தது. கை அலம்பும் வேளையில் கூரையில் கற்கள் விழ ஆரம்பித்தன.

நேற்றே வேழம்பனை வரச் சொல்லி இருந்தான். இந்த இருபது வருடங்களில் அவனுக்குத் துணை இணை எல்லாமே அவன் தான். குருகுலம் சென்ற சில வருடங்கள் மட்டும் தான் அவனோடு பேசாது இருந்த நாட்கள். சிறு வயது முதல் சென்ற வருடம் வரை குருகுலத்தில் இருந்ததால் இந்திர விழாவை இந்த முறை தான் தனியாக தந்தையின் பரிவாரங்கள் இல்லாது பார்க்கலாம் என்று எண்ணி இருந்தான். இதைக் கவனித்த அவன் தந்தை "யாரையோ எதிர்பார்ப்பது போல் உள்ளதே?" என்றார். "வேழம்பனை வரச் சொல்லி இருந்தேன், விழா நலம் காண உடன்போக்காய் அழைத்துச் செல்லலாம் என்று எண்ணம்" என்றான். "சொல்ல மறந்து விட்டேன். அவனை வேறு ஒரு அலுவல் காரணமாய் அனுப்பியுள்ளேன், இன்று இந்திர சேனனை அழைத்துச் செல்லலாமே, புதியவன் அல்லவா? நீ என்றால் ஒத்த வயதினன் பல விஷயங்கள் பேசலாமே என்று நினைத்தேன்". "சரி அப்பா அப்படியே ஆகட்டும்" என்றான். அலங்கட்டிகள் முற்றத்தில் நிரம்பியதும் வருணன் விடை பெற்றிருந்தான்.......... (தொடரும்)...

Sunday, February 7, 2010

இங்கொரு விழாத் தொடக்கம் - 5

அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்ச்சிகளின் காரணமாக எவர் நல்லவர் எவர் தகாதவர் என பிரித்தறியும் உணர்வை ஒருவாறு இழந்திருந்தான் இந்திரசேனன் . அதனால் தான் மாற்சிம்மன் அழைத்ததும் யார் எவர் என்று எதுவும் கேளாமல் அவனுடன் செல்ல சம்மதித்தான். அது மட்டும் அல்லாது அவனுடன் பேசுவதற்கு அவன் மொழி தெரிய வேண்டுமே என்ற பயமும் இருந்தது. மதுர மொழியை கேளாதே கற்றவனுக்கு அருந்தமிழ் புரியாதது ஆச்சர்யமளித்தது. அவனுக்கு பேசுவதில் தான் பிரச்சனை இருந்ததே ஒழிய அதைப் புரிதலில் எந்த குறுக்கீடும் இல்லை. இப்பொழுதும் அவன் ஏதாவது பேசுவான் என்றே காத்துக் கொண்டிருந்தான். அவனை அன்றி அந்த புதிய நகரைப் புரிந்து கொள்ள வழி ஏது? வந்து இறங்கியதும் அவன் பேசிய மொழிகள் அலுப்பை ஏற்படுத்தினாலும், அவன் பேச்சை கேட்டாக வேண்டிய சூழல் இந்திரசேனனுடையது. அவனுக்கு உரிய பதில் மொழியை பாவங்களிலும், சைகைகளிலும் தெரிவித்திருந்தாலாவது படகில் வரும் பொழுது ஏதாவது பேசி இருப்பான். தான் நாகரிகக் குறைவாக நடந்து கொண்டதாகவே உணர்ந்தான். இந்த பிரச்சனைகளோடு பசியும் சேர்ந்து கொண்டு இருந்தது.

மணற்பரப்பைக் கடந்ததும் ஒரு அழகிய தேர் காத்துக் கொண்டு இருந்தது. அதிகாலை சூரிய வெளிச்சத்தில் பிரகாசமாக ஜொலித்துக் கொண்டு இருந்தது. வண்டியை இழுத்துச் செல்லவதற்கு கட்டப் பட்டிருந்த விலங்கு குதிரை மாதிரியான தோற்றத்தில் இருந்தது. பரிணாம வளர்ச்சியில் குதிரைக்கு ஒரு படி முன்னதான அதே இனத்தைச் சார்ந்த ஒரு விலங்கு வகையாக இருக்கலாம். தேரில் ஏறி அமர்ந்ததும், தேரோட்டி செலுத்த தேர் கடல் இருந்த திசைக்கு எதிர் திசையில் பயணிக்கத் தொடங்கியது. சந்தனம் மற்றும் இன்னும் வித விதமான வாசனைப் பொருட்கள் விற்கும் வீதி, நவரத்தினங்கள் விற்கும் தெரு, நவதானியங்கள் விற்கும் தெரு, பட்டு மற்றும் கதர் துணிகள் விற்கும் தெரு, இவற்றைக் கடந்து சென்றதும் பெரிய பெரிய மாளிகைகள் கொண்ட ஒரு பிரமாண்டமான ஒரு சாலைக்குள் தேர் நுழைந்தது. 'இதற்கு மேலும் தாங்காது.. கேட்டு விட வேண்டியது தான்'.

"நாம் எங்கு இருக்கிறோம்? இவை எல்லாம் என்ன?" "சேனரே.. இருபெரும் பாக்கத்து பட்டினத்தின் மருவூர்ப் பாக்கம் இதுவேயாம். கூல வீதி, அருங்கல வீதி, காருகர் வீதி துறந்து, நகர வீதியில் உளம். கடற்கல வாணிகன் பெருமனை மாடம், யவனப் பெருமனை, வேயா மாடம், பண்டசாலை, மான்கட்காலதர் மாளிகை கொண்டதாம் நகர வீதி." இந்த உரையாடலால் இருவருக்கும் இடையே இருந்த இடைவெளி குறைந்து இருந்தது. எல்லா தெருக்களையும் குறுக்காக கடந்த தேர், இந்த நீண்ட சாலையில் அதன் நீளவாக்கில் ஊர்ந்து மற்றோர் சாலையில் புகுந்தது. மாற்சிம்மன் அறிமுகம் செய்த படி, அந்தத் தெரு இசைப்பாணர் தெரு, அதைத் தொடர்ந்து சித்திரக்கார வீதி, பொற்கொல்லர் வீதி, கருங்கைக் கொல்லர் வீதி, பின் தச்சர், கைவினைஞர், குயவர் வீதிகள் கடந்து சென்றன. அதைத் தொடர்ந்து தேர் ஒரு காட்டிற்குள் நுழைந்தது. வெறும் காட்டை எதிர்பார்த்தவனுக்கு அதற்குள் இருந்த பெரிய சந்தைகளும், வழிபாட்டு இடங்களும் , சிறு மண்டபங்களும் வியப்பளித்தன. வியப்பு தேக்கின கண்களுடன் மாற்சிம்மன் முகம் நோக்கினான். குறிப்பறிந்து "இவ்விடம் பொழில் சூழ் நாளங்காடியாம். ஐவகை மன்றங்களும், பலி பீடிகைகளும் இதன் கண் உள" என்றான்.

மரங்கள் வானளாவ உயர்ந்து இருந்தன, இருப்பனவற்றுள் ஒரு சில மரங்களையே அவனால் இனம் காண முடிந்தது. பெருமளவு நாவல் மரங்கள் இருந்தன, ஆங்காங்கே வேப்பமரங்களும், அரச மரங்களும் இருந்தன. சிறு சிறு கடைகள் மரத்தடியில் இயங்கி வந்தன. எதோ உலோகத்தாலான நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன, பண்ட மாற்று வழக்கும் இருந்தது. ஐந்து அடுக்கு கொண்ட கட்டடங்கள் இருந்தன. இதுவரை மண்ணால் ஆனா வீடுகளே இருந்த நகரில் இப்பொழுது தான் கல் கட்டடமே கண்ணில் பட்டது. பெரிய பெரிய மண்டபங்கள், சில கோயில்கள் போலவே இருந்தன, கோபுரங்கள் மட்டும் தான் இல்லை. பெரிய மதில் சுவர், குளங்கள், அமர்ந்து பேசும் இடங்கள் என பொழுது போக்குவதற்கு என்றே உருவாக்கம் செய்ததாகவே பட்டது. ஆயினும் வணிகர் தவிர பிறர் எவரையும் காணவில்லை. விழாக் காலம் ஆதலால் அனைவரும் கோயிலில் இருக்கலாம். மக்கள் கூட்டம் உள்ள ஒரு கட்டிடமும் இல்லாததைக் கொண்டே இவை எதுவுமே கோயிலாக இருக்க முடியாது என்று உணர்ந்து கொண்டான். சற்று தொலைவில் மரங்களினூடே சலசலத்து ஓடும் ஒரு நதி தெரிந்தது. அங்கு கணிசமான கூட்டம் தெரிந்தது. அந்தக் காட்டைக் கடந்த தேர் மற்றோர் மிகப் பெரிய நகரை அடைந்தது. இந்த நகரம் அகன்ற தெருக்களும், கலை நயமிக்க வேலைப்பாடு கொண்ட வீடுகளையும் கொண்டிருந்தது. செல்வச் சீமான்கள் இருக்கும் மிகப் பெரிய குடி என அறிந்து கொண்டான். இது குறித்து கருத்து கேட்க மாற்சிம்மனிடம் திரும்பிய பொழுது, தேர் நிறுத்தப்பட்டது. நிறுத்தியவர் தோரணையில் அவர் மிகப் பெரிய செல்வந்தர் எனவும், அதிகார பலம் கொண்டவர் எனவும் புரிந்தது. .. (தொடரும்) ..

Monday, February 1, 2010

இங்கொரு விழாத் தொடக்கம் - 4

'இவன் யாராக இருக்கக் கூடும். இவனுக்கும் என் வயதே இருக்கும். ஆனாலும் சிறுவனுக்கு உரிய துறுதுறுப்பு கண்களில் மின்னுகிறது. யாரோ ஒருவன் அழைத்தான் என்றவுடன் யார் என்று கூட கேளாமல் வருவது ஒரு முதிர்ந்தவன் செய்யும் செயல் அல்லவே. இந்த முதிர்வு கூட இல்லாதவனுக்கா இத்துணை ஏற்பாடு. ஒரு வேளை எனக்கு இவன் அறிமுகம் ஆனதுபோல் இவனுக்கு யாரேனும் என்னை அறிமுகம் செய்திருந்தால்? ஆயினும் நான் இவ்வளவு பேசியும் அவன் அதிகம் பேசாதது ஒரு வித முதிர்ந்த நிலை அல்லவா?' இவ்வாறாக மாற்சிம்மன் குழம்பிக் கொண்டிருந்த வேளையில், மறுபடியும் ஒரு குழந்தை போலாகி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் இந்திரசேனன். அவன் பார்த்த திசையில் பல திமில்கள் கடலில் எழும்பி இருந்தன. என்னே ஒரு வழக்காறு! மருத நிலத்தில் பகலவன் திருநாட்களில் காளையர்கள் காளைகளின் திமில் அழுத்தி 'காளையேறு' என்று பட்டம் சூடிக் கொள்வராம். அது போலே மாபெரும் படகோ, நாவாயோ செலுத்திப் பழகும் முன் முதற்கண் திமில் செலுத்திப் பழகுதல் வேண்டும் என்று விதிமுறை உளது. ஆயினும் திமில் செலுத்தல் இங்கு ஒரு வீரமாகவோ, விழாவாகவோ ஏனோ கொண்டாடப்படுவதில்லை. காளையின் வேகத்திற்கொப்ப அசையும் திமில் போல, அலைகளின் உயரத்திற்கேற்ப திமில் செலுத்துவோர் தலைகள் உயர்ந்தடங்கின.

படகு நறுவிரைத் துறையை அடைந்திருக்க வேண்டும். வாசனையால் கவரப்பட்டு இந்திரசேனனும் கரை நோக்கினான். நிறைமுகத் தீவில் பிற நாட்டு வணிகர்கள் வந்து விற்கும் பொருட்களுக்கு இணையாக புகாரின் பொருட்களும் விற்பனை ஆவதுண்டு. இங்கு வாங்கும் பொருட்களுக்கு வரி கிடையாது என்றாலும் தீவில் இருந்து வெளி செல்லும் பொது எடுத்துச் செல்லும் பொருட்களின் அளவு கட்டுப்படுத்தப் பட்டிருக்கின்றது. அவ்வளவை மீறும் போது தண்டல் வசூலிப்பதுண்டு. இந்த சந்தையில் வாணிபம் பெருமளவில் நடப்பதில்லை என்பதால் நாளுக்கு நாள் அங்காடிகள் குறைந்து கிடங்குகளாக மாறி வருகின்றன. இங்கிருந்து நறுவிரையோடன்றி, கூலங்கள், அகில், சந்தனம், பருத்தி மற்றும் எலி மயிரால் செய்த ஆடைகள், எனப் பலவும் ஏற்றுமதி ஆகின்றன. நகரின் விழாவில் நிறைமுகம் பங்கெடுக்க வில்லையோ எனும்படி தினப்படி வேலைகள் நடந்து கொண்டு இருந்தன. பண்டசாலை எனப்படும் கிடங்குகள் தீவின் நடுவில் இருந்தன, இவை வெளிநாட்டினர் வாங்கி வைக்கும் பொருட்களை சேமிக்க கிரயத்தில் விடப்படும். இது தவிர பயணியர் இளைப்பாற ஓங்குயர் மாடங்களும், தீவகச் சதுக்கமும், பூவிரும் மன்றமும் உள்ளன. இவற்றுள் மன்றமும் மாடங்களும் வணிகர் தங்குமிடங்களாகவும், சதுக்கம் சுமை தூக்குவோர், நாவாய் செலுத்துவோர், நாவாய்ப் பணியாளர் தங்குமிடங்களாகவும் செயல் படுகின்றன. அதற்கும் அப்பால் மீனவக் குடிகளும், தீவின் சிறு வியாபாரிகள் குடிகளும் உள்ளன.

படகு தீவில் இருந்து விலகி மருவூர்ப் பாக்கத்தின் கரையை நெருங்கிக் கொண்டிருந்தது. இளவேனிற்காலம் ஆனாலும் வற்றாத காவிரியின் ஓதங்கள் படகை அலைக்கழிக்க ஆரம்பித்திருந்தன. இந்திரசேனனையும் அழைத்துக் கொண்டு தரைதளத்துக்கு மாற்சிம்மன் விரைந்தான். படகைச் செலுத்துபவன் தன் திறமையால் நிதானமாக ஒழுங்குடன் செலுத்தினான். இந்த நீரலையில் தீவங்களை இணைத்து ஒரே தீவாய்ச் சமைத்த வல்லுனர்களின் திறன் போற்றுதற்குரியது. பௌர்ணமி மற்றும் அமாவாசையின் ஓதங்களின் போதும் மூழ்காத படிக்கு செய்தது அளப்பரிய சாதனை. பூம்புகாரின் வல்லுனர்களின் திறம் கண்டு பெருமை அடைந்தான் மாற்சிம்மன். ஒரு வழியாக ஓதங்களின் சுழலில் இருந்து தப்பித்து மீனவர் விளக்கத்தை நோக்கி படகு பயணித்தது. விளக்கத்திற்கு தென் திசையில் சிறுநாவாய் முதல் பெரும் மீன்பிடிப் படகுகள் அணிவகுத்து நின்றன. வடதிசையில் சிறு படகுகள், ஓடங்கள் மற்றும் திமில்கள் நிறுத்தப் பட்டு இருந்தன. இவற்றுள் ஓடங்கள் காவிரியின் எதிர் புனலில் சென்று பட்டினப் பாக்கத்தை அடையும் படி வடிவமைக்கப் பட்டவை. மாற்சிம்மன் எடுத்து வந்த படகு தென்திசை அடைய வேண்டும் என்றாலும் மீன் பிடிப்பதற்காக எடுத்துச் செல்லப் படாததால் பண்டக்காவலர் விளக்கத்தில் சென்று படகை ஒப்புவித்த பிறகே நிலையம் சேரலாம். மாற்சிம்மனும் இந்திரசேனனும் பண்டக்காவலர் விளக்கத்தில் இறங்கியதும் படகு நிலையம் சேர்ந்து விடும்.

பண்டக்காவலர் விளக்கத்தில் மாற்சிம்மனும் இந்திரசேனனும் இறங்கியதும், காவலர் தலைவர் "எட்டிக் குமாரருக்கு வந்தனம். பாக்கம் நீங்கிய யாண்டு வந்தவர் அறியாது மயங்கினன். பொறுத்தருள்க" என்றார். தீவகத்திற்கு படகு வேண்டும் என்று கோரிய போது எவர் என்று அறியாது சிறிய வசதி குறைவான படகே அளிக்கப் பட்டது, இப்பொழுது எப்படி எட்டிக் குமாரர் என்று அறிந்தார் எனத் தெரியவில்லை. பெருவணிகர் மக்கள் பரதகுமாரர் என அறியப்படுவார், அவரினும் மிகப் பெரிய வணிகர்களுக்கு எட்டிப் பட்டம் வழங்கப் படுவதால் அவர் குமாரர் எட்டிக்குமாரர் என அழைப்பர். பண்டக் காவலர் விளக்கதின்று நீங்கி மேற்கில் செல்லுங்கால் மொழிபெயர்ப்போர் குடியும், அதைச் சூழ்ந்து மீனவர் குடியும் உள்ளன. ஒவ்வொரு துறையிலும் பண்டக் காவலர் விளக்கமும், மொழிபெயர்ப்போர் குடியும் காணப் படும். மீனவர் குடிக்கு அப்பால் மணல் பரப்பைத் தொடர்ந்து மீன் விலை உரைப்போர் விளக்கமும் இருக்கின்றன. தேர் அங்கு தான் நிறுத்தப் பட்டிருந்தது. மாற்சிம்மனும் இந்திரசேனனும் மணல்பரப்பில் மணல் பரப்பில் நடக்கத் தொடங்கிய போது ஞாயிறு ஞாழல் முகம் கண்டு மலர்ந்தது. ... (தொடரும்)...

* அருஞ்சொற்பொருள் விளக்கம்
திமில் - கட்டுமரம் போன்ற எளிமையான படகு
நறுவிரை - நறுமண மசாலா பொருட்கள் (spices)
கூலங்கள் - தானியங்கள்
ஓதங்கள் - ஆற்று நீர்மட்டமோ, கடல் நீர்மட்டமோ ஒன்றுக்கொன்று ஏறவோ இறங்கவோ செய்யும் போது அலையும் நீரோட்டம்.
ஞாழல் - நெய்தல் நிலத் தாவரம் (மரம், பூ)