Sunday, July 26, 2009

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைத் தூற்றுதும் திங்களைத் தூற்றுதும் - 8

நிழல். வெளிச்சத்தின் மறுபுறம். வெளிச்சம் தலை நிழற்பூ. வெளிச்சமில்லாமல் நிழல் தனித்து இருக்க முடியாது. நிழல் இல்லாத வெளிச்சம் சகிக்க முடியாத கனல். ஏனெனில் வெளிச்சம் தனித்து வருவதில்லை அத்தோடு வெயிலையும் சேர்த்துக் கொண்டு தான் வருகிறது. வெயில் வெளிச்சத்தின் இல். வெளிச்சமும் நிழலும் அருகருகே இருக்கின்றன. வெளிச்சத்தின் வெம்மை நிழலிலும் இருக்கின்றது. எனவே நிழலில் இருப்பது குளுமை அன்று அது வெயிலுக்கு ஒரு ஆறுதல் அவ்வளவே.ஆனால் நிலவோ குளுமையானது. ஏனெனில் அது சூரியனின் நிழல் இல்லை. சூரியனின் பிரதிபலிப்பு. நிலவு சூரியனுக்கு எதிர். நிழல் சூரியனுக்குத் துணை அல்லது இணை. புராணம் என்ன சொல்கிறது?

சூரியனின் மனைவி சரண்யு, யமனின் தாயானவள், விடியல் மற்றும் மேகங்களின் தேவதை என விளிக்கப்படுகிறாள். சரண்யு சூரியனின் தகிப்பு தாளாமல், பூமிக்கு வந்து சூரியனின் ஒளிக் கண்களுக்கு மறைந்து தன் தோழி சாயாவுடன் வாழ்ந்து வருகிறாள். ஒரு நாள் சாயா இல்லாது சரண்யு தனித்து செல்லும் போது சூரியனின் பார்வையில் சிக்கிக் கொள்கிறாள். தான் இது வரை சூரியனின் பார்வையில் படாது வாழ்ந்து வந்ததன் காரணம் சாயா தேவி எனப்படும் நிழல் தேவியின் நட்பினால் என உணர்கிறாள். சூரியனுடன் செல்ல வேண்டுமானால் சூரியன் சாயாவை மணந்து தன்னுடன் அழைத்து வர சம்மதிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறாள். சூரியன் சம்மதிக்கிறான். இவ்வாறாக நிழல் வெளிச்சத்தின் அதிபதியாம் சூரியனின் மனைவியாகிறாள். இன்றும் சூரியனுடனே வாழ்ந்து வருகிறாள். இப்போது பதிவிரதா தர்மத்தின் படியும், வெளிச்சம் இல்லாது நிழல் இல்லை.

என்றோ ஏதோ வெளிச்சத்தின் உதவியால் நிழலில் எடுக்கப்பட்ட நிழல் இன்று வெளிச்சத்தின் பார்வையில். அந்த ஒளி நிழலாக்கி இருந்த நிழல் கண்ணன் மற்றும் மோகினியுடையது. அப்படியானால் அவர்கள்? படத்திற்குக் கீழே ஆங்கிலத்தில் "Kannan Vasudevan with Chitraangadha Hari" என்று இருந்தது. அது நிழற்படம் மட்டும் அல்ல. அது ஒரு புத்தகம். அந்தப் புத்தகம் எப்படி என் பைக்குள். யோசிக்க நேரமில்லை. அதோ அந்த ஓடையின் சலசலப்பு என்னை அழைக்கின்றது.

இப்பொழுது டார்ச்சை மட்டுமில்லை புத்தகத்தையும் எடுத்துச் செல்ல வேண்டும். இரண்டும் என்னிரண்டு கையில். கால்களோ தரையில் சில நொடி பட்டு பல நொடி காற்றில் மிதந்தது. இப்பொழுது அந்த ஆண் குரங்கின் குரல் "Daisia..". டைசியா அந்தப் பெண்ணின் பெயராக இருக்க வேண்டும். ஆனால் குரல் வந்த திசை நான் செல்லும் திசையாக இருந்ததால், கால்கள் அதிக வினாடி தரையில் படத் தொடங்கியது.

நான் வேகத்தைக் குறைத்ததால் மின்மினிகள் தோன்றிய இடத்திற்கு முன்னமே நான் நின்று விட்டேன். எதிரில் அந்த குரங்கு. டைசியாவைப் பார்த்துவிட்டு என்னை நோக்கி ஆக்ரோஷமாக உறுமியது. அதைத் தாக்க என்னிடம் இருந்தவற்றுள் டார்ச்சே சரியான ஆயுதமாய் பட்டது. அத்தோடு புத்தகத்தை இழக்க நான் தயாராக இல்லை. அடுத்த நொடி டார்ச் அதை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. அவசரத்தில் டார்ச்சை அணைக்காததால் அதன் வெளிச்சம் அது வருவதை அவனுக்கு உணர்த்தி இருக்க வேண்டும். அவன் விலகிக் கொண்டான். இனி என் கதி?... (தொடரும்)...

Wednesday, July 22, 2009

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைத் தூற்றுதும் திங்களைத் தூற்றுதும் - 7

நெருப்பு. அழியா பூதம். அமைதியானது கனன்று எழும் வரை. குரூரமானது அமிழ்ந்து அடங்கும் வரை. சட்டென்று நொடியில் உருவாகும் வல்லமை கொண்டது. நெருப்பு கொண்ட இடம் தன் அடையாளத்தை அழித்துக் கொள்கிறது. நேற்றைய நிலை இன்று இல்லை என்று ஆக்கும் மகா சக்தி. இதனாலோ என்னவோ பூதங்களுள் ஒன்றாய் கருதப் படுகின்றது. நல்லோர் தீயோர் என்று பார்க்காது புடைத்துண்ணும் பூதம். எமனின் கைக் கூலி. கல்லுக்குள் ஒளிந்து இருக்கும் நெருப்பு உரசும் போது பற்றிக் கொள்கின்றது. கங்கில் பற்றிக் கொண்ட நெருப்பு விசுறும் போது பற்றி எழுகின்றது. உள்ளத்துள் எழுகின்ற நெருப்பு நாவிற்கு வரும் போது கனல் தெறிக்கின்றது.

ஆனாலும் சில நெருப்புகள் வீட்டில் செல்லப் பிள்ளைகள் போல் வளர்க்கப் படுகின்றன அடுப்பங்கரையில். பிரகாசித்திருக்க அணையாது காக்கப் படுகின்றன தெய்வ சந்நிதானத்தில். தேவர்களிடத்து யாசிக்க நெய்யூற்றி வளர்த்தப் படுகின்றன யாகக் குண்டத்தில். புல் இரவு முழுவதும் சேகரித்து வைத்த தலைக் கனத்தை அதிகாலையில் எங்கோ தூரத்து எழும் நெருப்புக் கோளம் கரைத்து விடுகின்றது. மாநகர் கூடலில், பெண்கள், குழந்தைகள், அறவோர், பசுக்களன்றி ஏனையோருக்கு அப்பத்தினி தெய்வம் வைத்த நெருப்பும் நல் வகையினதாம். கூண்டுக்குள் அடைபட்ட நெருப்பு வழித் துணையாய் அமைவதோடன்றி, பயத்தையும் விரட்டி அடிக்கின்றது.

மோகினியின் கையில் இருந்த பை அவளது கூர்மையான கை விரல் நகங்களால் கிழிக்கப் பட்டிருக்க வேண்டும். என் பையில் இருந்த டார்ச் அவள் பறக்கும் போது வேறு திசையில் எகிறி விழுந்து ஓடைக் கரைப் பாதைக்கு வெளிச்சம் காட்டிக் கொண்டு விழுந்து கிடந்தது. "Let him come out of the stream" ஞாபகத்திற்கு வந்தது. அவர்கள் ஏன் நான் ஓடையை கடக்கும் வரை காத்திருக்க வேண்டும். புரிந்தது. அவர்களால் ஓடையைக் கடக்க முடியாது. நான் செல்ல வேண்டிய இடமும் அதுதான். ஆனால் இந்தக் குரங்கு மனுஷி என்ன ஆனாள்?

"Mom" என்றபடியே இரு சிறு மின்மினிகள் காற்றில் தோன்றின. சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ஏற்கனவே தெரிந்த இரு மின்மினிகளை நோக்கி அவை பறக்கத் தொடங்கின. இது தான் சரியான சமயம். ஆனால் இன்னும் இரு மின்மினிகள் இங்கே இருக்கின்றதே. எதையும் எதிர் கொள்ளும் தைரியம் பிறந்து விட்டது எனக்கு. இங்கேயும் சாவு அங்கேயும் சாவு என்ற நிலையில் எதற்கும் மனம் துணிந்து விடுகின்றது.

டார்ச்சை நோக்கி ஓடினேன். இந்த இருண்ட பிரதேசத்தில் எனக்கு வழி காட்ட அதுவும் தேவை எனப் படவே அதை எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்து குனியும் போதுதான் கவனித்தேன். ஒளி ஓடைப் பாதைக்கு மட்டும் இல்லாமல், ஒரு நிழற்படத்திற்கும் வெளிச்சம் தந்து கொண்டு இருந்தது. அதில் சிரித்துக் கொண்டு இருந்தவர்கள் இருவர். அவர்கள் ..(தொடரும்).....

Tuesday, July 14, 2009

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைத் தூற்றுதும் திங்களைத் தூற்றுதும் - 6

இருள். அனைத்தையும் விழுங்கக் கூடிய வல்லமை கொண்ட இருள். தன்னை நிகர்த்தார் இவ்வுலகில் இல் எனும் இறுமாப்பு கொண்ட இருள். பிரபஞ்சத்தின் கருந்துகள்கள் எதையும் விழுங்கி, விடுகின்ற ஏப்பத்தயும் கூட வெளிவிடாமல் அதையும் விழுங்கிக் கொள்ளுமாம். இருள் தன்னேர் இல்லான் ஆயின் இன்று உலகத்தில் இருளன்றி எதுவும் இராதே. இருள் மண், மரம், காடு, நீர் ஏன் மனிதர்களின் நம்பிக்கைகளைக் கூட விழுங்கி விடும் வல்லமை கொண்டது. இருளில் மனிதன் பாம்புக்கும் பேய்க்கும் பயப்படுவதில்லை. இருளுக்கு மட்டுமே பயம் கொள்கின்றான்.

மகாபாரதத்தில் வரும் சிறு சிறு சம்பவங்களில் பாண்டவர்களின் முதல்வனான யுதிற்றனின் பெருமை கூறும் ஒரு சம்பவம் இருள் பற்றியது. பறவையின் கண்களை மட்டுமே குறி பார்த்து அர்ஜுனன் வென்ற பின் நடப்பதாய் வரும் சம்பவம். இம்முறை துரோணர் ஒரு சிறு அறையைக் கொடுத்து பாண்டவர்களைத் தனியாயும் கௌரவர்களைத் தனியாயும் நிரப்பச் சொல்கிறார். கௌரவர்கள் தம் அறையில் வண்டி வண்டியாய்ப் பொன்னை நிரப்பி, அறை நிறைய பொன் இருப்பதாய்ச் சொல்கிறார்கள். துரோணர் ஒரு அம்பை கதவிடுக்கில் விட்டு அப்போது அந்த அம்பு இருந்த இடம் நிரம்பாமல் இருப்பதால் அவர்கள் தோற்றதாய் அறிவிக்கிறார். பாண்டவர்கள் தம் அறையில் ஒரு சிறு அகல் விளக்கை ஏற்றி வைத்து அவர்கள் அறையில் வெளிச்சம் நிறைந்து இருப்பதாய்ச் சொல்கின்றனர். அவர்களே வென்றதாய் அறிவிக்கப் படுகின்றனர்.

அரக்கர்கள் பிரம்மாவிடம் வரம் கேட்கும் பொது இன்ன இன்ன உயிர்களால் தன்னுயிர் அழியாதிருக்க வரம் வேண்டுவார்கள். அவர்களது பட்டியல் தன்னை விட மிகச் சிறந்தவர்களை உள்ளடக்கியதாய் இருக்கும். அதன் பின் எல்லா புராணங்களையும் போல அவர்களின் பட்டியலில் இல்லாத ஒரு அவதாரம் அவ்வரக்கர்களை அழிக்கும். அதே அரக்கர்கள் போல் தான் இருளும் இறுமாப்பு கொண்டு அலைகின்றது. அதற்கென்ன தெரியும் ஒரு சிறு அகல் விளக்கு எல்லா இருளையும் களைய வல்லதென்று.

என்னால் தப்பிக்க முடியுமா என்ற கேள்வி என்னுள் எழுந்தது. அவர்கள் உரையாடலில் அவர்கள் கண்களைத் திறந்தால் நான் தப்பிக்க முடியும் என்றொரு வாக்கியம் வந்தது என்னுள் மேற்கண்ட கேள்வியை எழுப்பி இருந்தது.
இந்த கரடு முரடான இடத்தில் காலடி அரவம் கேட்காமல் அவர்கள் நகர்வது விந்தையாய் இருந்தது. நிச்சயம் அவர்கள் நகர்கிறார்கள் என்று என் உள் உணர்வு மட்டும் உரைத்துக் கொண்டிருந்தது. எந்த நொடியும் அவர்கள் என்னைப் பிடித்துக் கொள்வார்கள் என்ற நிலையில் என் கடைசி நொடிகளை நான் என் கை விரல்களில் எண்ணிக் கொண்டிருந்தேன்.

"I got him" மோகினியின் குரலைத் தொடர்ந்து இரு மின்மினிகள் என் கால் எட்டும் தூரத்தில் அதாவது என் பை தொங்கிக் கொண்டு இருந்த இடத்தில் தோன்றின. அவள் பையை நானாக நினைத்துக் கத்தி இருந்தாள். இப்பொழுது அவள் என்னைப் பார்த்திருப்பாள். என் மரணத்தை சிறிது நேரம் தள்ளிப் போட கிடைத்த வாய்ப்பாக எண்ணி அவளை எட்டி உதைத்தேன். ஒரு பெரிய அலறலோடு பையைப் பிடித்த வண்ணம் அவள் காற்றில் பறந்து கொண்டிருந்தாள். அவளில் இருந்து ஒரு தனி ஒளி பிரிந்து ஆலமரத்தின் குடைக்கு வெளியே விழுந்தது. அது ..(தொடரும்)....




Sunday, July 5, 2009

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைத் தூற்றுதும் திங்களைத் தூற்றுதும் - 5

இருள் நீடிக்கிறது. பிரபஞ்சத்தில் இல்லாத இருள். பிரபஞ்சத்திற்கு நட்சத்திரங்களால் ஒளி உண்டு. இங்கு அதுவும் இல்லை. இங்கு எதுவும் இல்லை. இருள் மட்டும் தான் இருக்கிறது. அதை நிலவால் களவாட இயலாது. இவ்விருள் நிலவின் கைக்கு எட்டாத தூரத்தில். ஆனால் இந்த இருளும் நிரந்தரம் அல்ல. நிலவால் கூட களவாட இயலாத இருளை மின் மினிப் பூச்சிகள் களவாட இயலும். முதன் முறை வெளிச்சத்திற்கு பயப்படுகின்றேன். மின்மினிப் பூச்சிக்கும். அந்த மின்மினிப் பூச்சிகள் மட்டும் இங்கு வந்தால் நான் இனி வெளிச்சமே காண முடியாது எனத் தோன்றியது . நீல மின்மினிகள். ஆம் நீல நிற LED மாதிரி பளிச் என்ற வெகு தூரம் காணக் கிடைக்கின்ற பிரகாசமான நீல நிற மின்மினிகள்.

இப்போது சொல்ல வில்லை என்றால் எப்போதுமே என்னால் சொல்ல முடியாது என எண்ணுகிறேன். கண்ணனின் குரலுக்கு ஏற்ற மனிதன் அல்லாத உருவம் துரத்துவதாய் சொன்னேன் அல்லவா. ஆனால் அதை முழுவதுமாய் மனிதன் இல்லை என்று மறுத்துக் கூற முடியாது. அரை மனிதன். அரை என்றால் உயரத்தில் அல்ல. பரிணாமத்தில். சற்றே குரங்கு என்று சொல்லி விடக் கூடிய அரை மனிதன். அரையில் ஏதுமில்லா அரை மனிதன். புகார் வச்சிரக் கோட்டத்து காபாலிகனையும் கால் தூசி என்று என்ன வைக்கும் கொடுமையான உருவம் கொண்ட இரத்தம் குடிக்கும் காட்டேரி. இரத்தக் காட்டேரி. ஆங்கிலத்தில் Dracula. அவன் வாயில் வீசும் பசும் இரத்தத்தின் கவுச்சி நெடி இன்னும் என் நாசியில் நீடித்து இருக்கிறது. அவன் வாயின் கோரப் பற்களின் வாயிலாக குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவனாய் இருக்கலாம் எனக் கருத வாய்ப்பளித்தான். கண்கள் மிருகங்களுக்கே உரித்தான இருட்டிலும் பளிச் என்று தெரியும் ஒளிமிக்க கண்களாய் இருந்தது. நீளமாய் இருந்தது. ஆனால் மிக நீலமாய் இருந்தது. அவன் எந்நேரத்திலும் வரக் கூடும். அவன் அந்த நீல மின்மினிப் பூச்சிகளைக் கண்களில் ஏந்தி எக்கணமும் வரக் கூடும்.

அதற்கு முன், என் சுமையைக் குறைத்தாக வேண்டும். பையை அருகில் தென்பட்ட ஒரு விழுதில் கட்டித் தொங்க விட்டேன். இன்னும் இருள் இருக்கிறது. கண்களுக்குப் பழகாத இருள்.அரை மனிதனின் கண்களுக்குப் பழக்கப் படாத இருளாகவே நீடிக்க வேண்டும். இருள் நீடிக்கின்றது. இருள் இன்னமும் நீடிக்க வேண்டும். மின்மினிப் பூச்சிகளால் களவாட முடியாத இருளாகவே நீடிக்க வேண்டும். ஆனால் என் கண்களுக்கு எட்டாத ஓடைக் கரையில் சந்திரன் பிரகாசித்துக் கொண்டு தானே இருக்கிறான். அந்த மின்மினிகளுக்கு ஒளியை ஏற்றிக் கொண்டு தானே இருக்கிறான்.

ஒளி பெற்ற மின்மினிகள் ஆறு. ஆறும் ஆல மரத்தை நோக்கி வந்து கொண்டு இருந்தன. பறந்தன அல்லது மிதந்தன. அருகில் மிக அருகில் ஒரு குழந்தையின் சிணுங்கல். "I wanna taste his blood". அதே நாராசமான அமெரிக்க ஆங்கிலம். தமிழ் மழலையின் சங்கீதம் ஆங்கிலத்தில் சிறிதும் துளிர்க்கவில்லை. ஆனால் சங்கீதமாய்க் கேட்டன நான்கு காதுகளுக்கு. மோகினி உரைத்தாள் "Dear, just close your eyes for awhile. I will catch that insect for you". "Darling, Dont open your eyes. Otherwise that insect will trace us and will try to escape." இக்குரல் கண்ணனுடயதாய் இருந்தது. மின்மினிகள் மறைந்தன. (தொடர்ந்து வருகின்றது)...

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைத் தூற்றுதும் திங்களைத் தூற்றுதும் - 4

வானம் இருண்டு இருந்து. கோபுர தீபம் அணைந்தாலும் ஆலயத்தின் பள்ளியறை தீபம் மட்டும் இன்னும் அமிழ்த்தப் படவில்லை. நிலவு முன்னைக் காட்டிலும் இன்னும் பிரகாசமாய் அதி பிரகாசமாய் ஜொலித்துக் கொண்டு இருந்தது. பால் நிலவு, நிலாச் சோறு எல்லாம் அர்த்தம் அற்றதாகி இருந்தது. தலைவனைப் பிரிந்த தலைவி பாலை நிலவைப் பாழ் நிலவே என வர்ணித்தது மட்டும் ஏனோ அர்த்தம் செறிந்ததாய்த் தோன்றியது. இருந்த வெளிச்சமும் நிலவினுடயது. வெயிலுக்கு பயந்து பாம்பின் பட நிழலில் ஒதுங்கிய தவளையின் கதை ஏனோ நினைவில் வந்து உறுத்தியது. ஏன் இந்த எண்ணம். பாம்பும் நிலவும் எப்படி ஒன்றாக முடியும். இருவரும் பரம எதிரிகள் என்று இலக்கியமும் அம்மாவும் கூட சொல்லி இருக்கிறார்கள். ஒரு வேளை நாக பூஷண சந்திர மௌலியாகிய சிவன் சமரசம் செய்து இருப்பரோ. இப்பொழுது கடவுளையும் நான் நம்புவதாய் இல்லை. எனக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை மோகினி தான். அவள் தான் என்னைக் காப்பாற்றுவாள்.

ஆம். காப்பாற்றினாள். நான் கரையில் ..ஓடையின் அக்கரையில்... மோகினியின் அக்கறையில்... நிலவின் ஒளி ஓடை நீரை இரத்தமாய் மாற்றிக் காண்பித்தது. அது இரத்தம் தானா என்று ஊர்ஜிதம் செய்ய நான் விரும்ப வில்லை. அதோ அந்த ஆல மரம் வாரல் என்பன போல் மறித்துக் கை காட்டிற்று. அந்த மோகினி அந்த மரத்தின் பின் சென்று தானே மறைந்தாள். ஒரு வேளை அது அவள் தற்கொலை செய்த இடமாய் இருக்குமோ. ஒரு வேளை அவள் மோகினியாய் இல்லாமல்லிருந்தால்? நான் அம்மரத்தை நோக்கியே செல்வது எனத் தீர்மானித்தேன். ஆனால் நான் கேட்பது என்ன?

"He is there"ஒரு ஆண் குரல் . "Let him come out of the stream" இது பெண்.

முதலில் ஒலித்தது கண்ணன் குரல். அடுத்தது மோகினி. அவர்கள் இங்கே தான் இருக்கிறார்கள். மிக அருகில். நான் ஓடையில் இருந்து வெளியே வரக் காத்திருக்கிறார்கள். கண்ணனை சந்திக்கும் ஆவலில் வேகமாய்.. அந்தக் குரல்கள் எண்ணி இருக்காத வேகத்தில்.. ஓடையில் இருந்து எகிறிக் குதித்து வெளியேறினேன். குரல் வந்த திக்கில் உள்ள ஒரு மரம் சலசலத்தது.

கண்ணனின் குரல் கண்ணனின் உருவத்திற்குப் பொருந்தவில்லை என்றேன் அல்லவா. இதோ இங்கே என் கண் முன் ஓடி வரும் உருவத்திற்கு கச்சிதமாய்ப் பொருந்தும். ஆனால் அந்த உருவம் ஒரு மனிதனுடயது இல்லை. நான் அதைப் பற்றி விளக்கம் கொடுத்துக் கொண்டு நின்றேன் என்றால் அது என்னைப் பற்றி இழுத்துக் கொண்டு ஓடி விடும். நான் அங்கு நிற்கவில்லை. அதோ அந்த ஆல மரத்தை நோக்கி ஓடிக் கொண்டு இருக்கிறேன். மூச்சிரைக்க. என் பயணப் பையுடன். அந்த ஆலமரம் தான் எனக்கு நிம்மதி தரும் என, எந்த விதமான நிம்மதி என அறியாமல்... (தொடர்கிறது...)

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைத் தூற்றுதும் திங்களைத் தூற்றுதும் - 3

வானில் சூரியன் சுத்தமாய் இல்லை. மேகங்கள் மறைத்து இருக்கிறது என்றால் சூரியனை மறைத்த மேகம் ஏன் நிலவை மறைக்கவில்லை. இது அந்தி வேளை என்றாலும் சூரியன் மறைய வில்லை என்பதை அங்கே சூழ்ந்து இருக்கும் வெளிச்சம் வெளிச்சம் போட்டு காட்டியது. கிரகண காலத்து சீதோஷணம் நிலவியது. முன் பனிக் காலத்து சிலீரென்ற காற்று தொடர்ந்து மேலே பட்டுக் கொண்டு இருந்தது. கிரகண காலங்களில் அம்மா வெளியே போகக் கூடாது என்று சொல்லுவாள். அவள் காரணம் ராகு கேது என்ற இரு நாகங்களின் விடம் சூழலில் சூழ்ந்து இருக்கும் என்பதே. நான் கற்ற விஞ்ஞானமோ "uv கதிர்கள், பாக்டீரியா, நுண் கிருமிகள்" என்று பலவற்றுக்கும் முடிச்சு போட்டது. எவ்வாறாயினும் இவ்வேளையில் வெளியே இருப்பது சரி அல்ல என்று பட்டது. சமீபத்தில் கிரகணம் வருவதாய் எந்த செய்திகளிலும் சொல்ல வில்லை.

முழு நிலவை கண்டால் கடல் கொந்தளிக்குமாம். பைத்தியங்களுக்கு பித்தம் தலைக்கு ஏறுமாம். எனக்கு நிலவைப் பார்க்க பயமாய் இருந்தது. சினிமாவின் உச்ச கட்ட கட்சி போல் ஓடிச் சென்று "I love you" என்று சொல்லி விடுவது என்று முடிவெடுத்தேன். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் அவளைக் காணவில்லை. எந்த திசையில் செல்ல என்று தெரிய வில்லை. முன்பு நின்ற இடமாவது எப்படியாவது ஊர் போய்ச் சேர்வோம் என்று நம்பிக்கை அளித்து. இவ்விடம் நாலா புறமும் விடத்தை உறிஞ்சி வைத்துக் கொண்டு உமிழக் காத்துக் கொண்டிருந்தது.

நாங்கள் வந்த பாதையை நோக்கி கவனத்தைத் திருப்பினேன். சிறிது தூரத்தில் ஓடை ஒன்று மாநகராட்சிக் குழாய் உடைந்து தண்ணீர் உகுப்பது போல் சிறு ஓசையுடன் ஓடிக் கொண்டு இருந்தது. தார் சாலை எப்பொழுதோ முடிந்திருக்க, மணல் சாலையை ஈரமாக்கியவாறு ஓடை நீர் ஓடையின் பாதையிலிருந்து விலகி சாலையில் ஓடி வந்து கொண்டு இருந்தது. இதனால் நானும் அந்தக் க்ராதகியும் வந்த வண்டியின் தடம் தெளிவாகத் தெரிந்தது. நல்லது. இதே வழியில்.. இந்த தடத்தைப் பார்த்தவாறே சென்று விடலாம் என்று திரும்பி நடக்க ஆரம்பித்தேன். சிறிது தூரம் நடந்து வந்து மற்றோர் ஓடையின் அருகில் இருந்து திரும்பிப் பார்த்தேன். என் காலடித் தடங்கள் அந்த சகதியில் தெளிவாய்த் தெரிந்தன.

இன்னும் சற்று தூரத்தில்.. அதாவது நான் இறங்கிய இடத்தில் காலடித் தடங்கள் மறைந்து வண்டியின் சக்கரத் தடங்கள் ஆரம்பமாயின. எனது புத்தியில் சட்டென்று ஒன்று உறைத்தது. அவள் வண்டியில் எந்தப் பக்கமும் திரும்பாமல் நேராகச் சென்றாள். அப்படி ஆயின் என் காலடித் தடத்துடன் வண்டியின் சக்கரத் தடங்களும் இருக்க வேண்டுமே. அவள் அங்கிருந்து மறைந்து போகவில்லை. வண்டியில் செல்வதை நான் என் கண்களால் கண்டேனே.

ஓடை நீர் தடத்தை அழித்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பலனை குற்றம் சுமத்தப் பட்டிருக்கும் சூழலுக்கு சாதகமாக்கி எனக்குள் தீர்ப்பு எழுதிக் கொண்டேன்.
அடுத்து என்ன? அவள் இதே சாலையில் இதோ இந்த ஓடைக்குள் இறக்கி அக்கரை சென்று அப்பால் மறைந்ததைக் கண்டிருந்தேன் அல்லவா. ஓடையில் இறங்குவது என்று முடிவாயிற்று. உடைகளைச் சுருட்டி விட்டுக் கொண்டு பையைத் தோள்களில் ஏற்றிக் கொண்டு நீரில் இறங்கினேன். நீர் அந்தக் குளிரிலும் அந்த சூழலுக்கு பொருந்தாத மிதமான சூட்டுடன் இருந்தது. ஓடை நான் எதிர் பார்த்ததை விட ஆழமாகவே இருந்தது. நான் முட்டளவு நீரில் நின்று கொண்டிருந்தேன். அவள் சென்ற பொது இந்த ஆழம் இல்லையே. இந்த ஆழத்தில் நான்கு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாதே. நான் அவளை மோகினிப் பிசாசு என்றே முடிவு செய்து கொண்டேன். நீரின் வேகம் அதிகமாயிற்று. என் கால்கள் நீரில் இழுக்கப்பட்டன. முட்டளவு நீரில் கால்கள் இழுக்கப் படுவதாவது? அனால் அது பிரமை இல்லை. அந்த மோகினிப் பிசாசு என்னை இங்கு அழைத்து வந்தது என்றால் எதாவது ஒரு காரணம் இருக்க வேண்டும். அதற்காகவாவது நான் பிழைப்பேன் என்று நம்பினேன். பிழைத்தேன்.... (தொடரும்)

Saturday, July 4, 2009

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைத் தூற்றுதும் திங்களைத் தூற்றுதும் -2

மழை மட்டும் பெய்திருந்தால் கூதிர் என்றே சொல்லக்கூடிய வானிலை. ஆயிரம் கைகள் ஆதவனை மறைத்தாற்போல் மேகங்கள் சூரியனின் பிரகாசத்தைக் குறைத்துக் காட்ட முயற்சித்து தோற்ற வண்ணம் இருந்தன. மணி நான்கை நெருங்கி இருக்கலாம். கண்ணன் என்னை அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டு அரை மணி நேரம் ஆகிவிட்டு இருந்தது. ஜன நடமாட்டம் குறைவு என்பதை விட இல்லை என்பதே சரி என்று பட்டது. இது வரை மனிதர்களோ வாகனங்களோ அவ்வழி வழியே சென்றதாகவே படவில்லை. நகரத்தில் இது வரை நான் வந்து அறியாத இடமாக இருந்தது. எங்கே இருக்கிறேன் என்பதே தெரியாமல் என்ன செய்ய. குருவிடம் வந்து அழைத்து போக சொல்லலாம் என்று அலைபேசியில் அவனைத் தொடர்பு கொள்ள முனைந்தேன். மனிதர்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதி என்பதால் அலைபேசியும் தொடர்பு அற்று போய் கொட்டக் கொட்ட என்னை வெறித்துப் பார்த்துச் சிரித்தது....

பின் புறம் ஏதோ வாகனம் வந்து நின்றது போல் தோன்றிற்று. திரும்பி பார்த்தால் அழகான ஒரு பெண் தன்னுடைய scooty இல் நின்று கொண்டு இருந்தாள். அந்த அழகான ஆச்சரியத்தில் என்னால் ஏதும் பேச இயலவில்லை. அவளே வந்து "lift?" என்று கூறினாள்.இல்லை இல்லை கூவினாள். கவனிக்க.. "வேறு வழி இல்லாததால்" ஆவலுடன் செல்ல சம்மதித்தேன். என்னுடைய பயணப் பையில் சற்று முன் நூலகத்தில் எடுத்த புத்தகங்களும் மேலும் சில பாட புத்தகங்களும் சேர்ந்து பெரிய சுமையாக என் மடியில் அமர்ந்து மாநகராட்சியின் வேகத்தடைகளை நான் பாராட்ட முடியாத வண்ணம் பார்த்துக் கொண்டன.

Lift என்ற ஒரு வார்த்தைக்குப் பிறகு அவள் பேசிய எதுவும் என் காதில் விழவில்லை. ஆனாலும் அவள் ஏதோ பேசிக்கொண்டே வருகிறாள் என்பது மட்டும் தெரிந்தது. என்னுள் ஏதோ சிம்பொனி இசையை இளைய ராஜா உருவாக்கிக் கொண்டு இருந்தார். நான் அதன் லயத்தில் லயித்து இருந்து விட்டேன். திடீரென்று வண்டி நின்றது. அந்த இடம் மேலும் புதியதாய் இருந்தது. குளிர் அதிகமாய் இருந்தது. என் பற்கள் நடுங்கின. நான் வண்டியில் இருந்து இறங்கினேன். அவள் மிகுந்த கோபத்தோடு என்னை நோக்கினாள். கண்ணன் பேசிய அதே அமெரிக்க ஆங்கிலத்தில் "I am asking you.. What do you say.. Do you love me or not?". "pardon !?" இம்முறை நான் ஆச்சர்யத்தில் உறையவில்லை.

நான் அவள் கிறக்கத்தில் இருந்து மீள வரவில்லை என்றாலும், முதல் சந்திப்பிலேயே ஒரு பெண் இப்படிக் கேட்பாள் என்று எண்ணிப் பார்க்கக் கூட முடியாததால் எனக்கு சிறிது சந்தேகம் தோன்றியது. அதனால் பொய்யா உண்மையா என்று கூட யோசிக்காமல் அவளது அடுத்த கேள்வியை காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் "எனக்குக் கல்யாணம் ஆகி விட்டது" என்றேன். "Go to Hell" என்றபடியே என்னைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் என்னை அந்த வனாந்திரத்தில் அம்போ என்று விட்டு விட்டுச் சென்று விட்டாள்.... (தொடரும்)...

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைத் தூற்றுதும் திங்களைத் தூற்றுதும்

நண்பகல் பன்னிரண்டு மணி இருக்கும் எனத் தோன்றியது. தமிழ் நாடு கோடைக்கே உரித்தான வெண்ணொளியை மைதானமெங்கும் பரப்பி விட்டு அக்கா குருவியின் சங்கீதத்துக்கு செவி சாய்த்துக் கேட்டுக்கொண்டிருக்கிறது. சூரியன் தன் கிழத்தி சாயாவுடன் உலா செல்ல இயலாத மைதானத்தை சுட்டுப் பொசுக்கி விடும் எண்ணத்தில் வெறித்துக் கொண்டிருக்கிறான். எனக்குப் பசியோடு தாகமும் சேர்ந்து கொண்டது. மைதானத்தைச் சுற்றி செல்லும் முன் நூலகத்தை மூடி விடக்கூடும். கல்லூரி முடிவடைந்து விட்டதால் நூலகப் பணியாளர்கள் சிறிதும் தாமதிப்பதில்லை. பதினான்கு நாட்களுக்கு முன் பரிட்சைக்காக எடுத்த புத்தகங்களை ஒப்படைக்க இன்று கடைசி நாள். புத்தகத்தை ஒப்படைத்து விட்டு மெஸ்சுக்கு சென்று சாப்பிட வேண்டும். எனவே மைதானத்தைக் குறுக்காக கடந்து நூலகம் அடைக்கும் முன் புத்தகத்தை ஒப்படைதாக வேண்டிய கட்டாயம். நூலகத்தை நெருங்குகையில், சாலையில் மைதானத்தைச் சுற்றி நூலகத்தை அடைந்து கொண்டிருக்கும் வசந்த்தை நோக்கி கை அசைத்தேன். பின் இருவருமாக நூலகத்தில் நுழைந்த போது....
அங்கு வழக்கமாக காணப்படும் நூலகத்திற்கான அறிகுறிகள் அதிகமாய் தென்பட வில்லை. ஒரே ஒரு நூலகர் மட்டும் இருந்தார். நூல்களை ஒப்புவித்து விட்டு, விடுமுறையில் படிக்க நாவல் பகுதிக்குச் சென்று பெயர் கூட பார்க்காமல் நான்கு நாவல்களை எடுத்து நூலகரிடம் கொடுத்தேன். புத்தகங்களுள் ஒன்றுக்கு அடையாள எண் இல்லை என்று சொல்லி விட்டு, அதைத் தரவுப்பலகையில் ஏற்றம் செய்து விட்டு புது எண் இட்டுக் கொண்டிருந்தார். அந்த இடைவெளியில் நூலகத்தின் வெளியே குருவின் பேச்சுக் குரல் அழைத்தது. குரு என்னை விட ஒரு வயது சிறியவன். நூலகம் மூடும் சமயமாதலால் அவனை உள்ளே விட அனுமதி மறுக்க படுவதாக அவர்கள் உரையாடலில் புரிந்தது. அவனிடம் தான் என்னை பேருந்து நிலையத்தில் கொண்டு விடும் படி கேட்டிருந்தேன்.

"என்னண்ண அடுத்து என்ன?" என்றான். "US Universities கெடைக்காது போல தோணுது. என்னோட மார்க் கம்மி ஆச்சே. எதாவது கனடா universitiesல தான் முயற்சிக்கணும். professor யாரோ ஒரு சீனியர் மெயில் ஐடி கொடுத்தார். கண்ணனாம். கனடால தான் படிக்றாராம். அலும்னில விசாரிச்சு போட்டோ, போன் நம்பர் கூட வாங்கி வச்சுருக்கேன் " இது நான். அதற்குள்...

"I am kannan. I am an alumni of this college. I came to meet professor Rajendran. He told about you. He asked me to help you. I went to your room. Your roommate told me that you are in library. " முதுகைத் தட்டியவர் ஸ்பஷ்டமான அமெரிக்க ஆங்கிலத்தில் சொல்லி முடித்தார். வசந்த் சாலையில் நின்று அவன் தான் அனுப்பியதாய் ஜாடை செய்தான். நான் குருவிடம் விடை பெற்று கொண்டு கண்ணனின் காரில் ஏறி அமர்ந்தேன். இதற்குள் என்னைப் பேருந்து நிலையத்தில் விட கண்ணன் தயாராய் இருப்பதாக கூறினார். நான் விடுதிக்கு சென்று பைகளை எடுத்துக்கொண்டு கிளம்பும் போது வசந்த் மெஸ்சுக்கு சென்று திரும்பி வந்தான். அவனிடமும் விடை பெற்று கார் வளாகத்தைக் கடந்து சாலையை அடைந்தது.

காரின் குளிர்ந்த வெப்ப நிலையும், ஒளி எதிர்க்கும் கண்ணாடிகளும் வெயிலின் தாக்கத்தை சிறிது குறைத்திருந்தன. கண்ணன் தொடர்ந்து அமெரிக்க ஆங்கிலத்திலேயே தன் உருவத்திற்கு சற்றும் பொருந்தாத குரலுடன் பேசிக்கொண்டே வந்தார். ஆனாலும் அவர் பேச்சில் சற்று கவர்ச்சி இருக்கத்தான் செய்தது. அவரது அலைபேசி சிணுங்கியது. எடுத்து எதுவுமே சொல்லாமல் வெகு நேரம் கேட்டு கொண்டு இருந்து விட்டு.. "If you dont mind, I will drop you to the nearest bus stop. I have some urgent work to do. I am sorry" என்றார். ....(தொடரும்)