Wednesday, November 25, 2009

புத்தகம் புகுந்த கதை - 5

விண்கலம் அதன் பாதையில் சீராக சென்று கொண்டு இருந்தது. எனது என்ன ஓட்டம் புத்தகத்தில் கூறிய கதையிலேயே நின்று கொண்டு இருந்தது. மறுபடியும் படித்தேன். அந்த குரங்குகள் நான் பார்த்த குரங்குகள் தானா என்று எனக்கு சந்தேகம் வராமல் இல்லை. ஆனால் சம்பவம் நடந்த காலம் அறுதியிட்டு கூற முடியாததாக இருந்தது. கண்ணன் கால்கரி பல்கலைக் கழகத்தில் சேர்ந்த பின் நடந்த சம்பவம் என்பது புகைப் படத்தில் தெளிவாக தெரிந்தது. எனவே கடந்த இரண்டு வருடங்களுக்குள் நடந்திருக்கலாம். கண்ணன் ஆரம்பத்திலேயே ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்திருப்பதால் அது முடிவதற்கு இன்னும் மூன்று வருடங்கள் ஆகும்.

கண்ணன் எடுத்துச் சென்றது குரங்குக்குட்டி தான் என்று என் உள்மனம் சொல்லியது. பெய்லீக்கு குறைந்தது ஐந்து வயதாவது இருக்க வேண்டும். எனவே அந்த குட்டி பெய்லீ இல்லவே இல்லை. டைசியா இவன் தாய் என்றால் இரண்டு வருடங்களுக்கு முன் இவர்கள் மனிதர்களால் பிடிக்கப்பட்ட போது பெய்லீ எங்கே இருந்திருப்பான்? அல்லது பிடிபட்டவர்கள் பெய்லீயின் பெற்றோர்கள் இல்லை என்றால் அவர்களுக்கும் பெய்லீயின் உடனிருந்தவர்களுக்கும் என்ன தொடர்பு? ஆய்வுக் கூடத்தில் இருந்த ஆண் குரங்கு இன்னும் உயிருடன் இருக்கிறதா? ஒரு வேளை அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள என்னை கடத்தி இருப்பார்களோ?

நிச்சயம் தேவை இல்லை. ஏனெனில் சித்ராங்கதா இங்கு தானே இருக்கிறாள். எப்படி யோசித்தாலும் சித்ராங்கதா இந்த அனைத்து குரங்குகளுக்கும் வேண்டியவள். கண்ணனுக்கு ஆய்வகக் குரங்குகள் வேண்டியதாய் இருக்கலாம். ஆனால் கண்ணன் பேசியது இந்த பேய்க் குரங்கின் குரலில் என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படியென்றால் இந்த பேய்க் குரங்குகள் கண்ணனையும் சித்ராங்கதாவையும் பயன்படுத்தி அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த விண்கலத்தின் உதவியுடன் என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன. பேய்க் குரங்குகள் உயிரோடு இல்லாததால் இந்த விண்கலம் இப்பொழுது மற்றொருவரின் கட்டுப்பாட்டிற்கு சென்றிருக்க வேண்டும்.

யார் அவர்? இந்த குரங்குகளுக்கு வேண்டியவரா? அவர் கட்டுப்பாட்டில் தான் கண்ணனும் சித்ராங்கதாவும் இப்பொழுது இருக்க வேண்டும். இந்த விண்கலம் இறங்கும் இடத்தில் தான் நான் பல உண்மைகளைத் தெரிந்து கொள்ளப் போகிறேன். இன்னும் எவ்வளவு நேரம் பயணிக்க வேண்டும் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் போதே.. விண்கலம் வேகத்தைக் குறைத்து கீழே இறங்க ஆரம்பித்தது. கீழே மின்விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட அதி நவீன நகரம் என்னை வரவேற்க காத்துக் கொண்டிருந்தது. ..( தொடரும் ).....

Tuesday, November 24, 2009

புத்தகம் புகுந்த கதை - 4

ஆண் குரங்கின் இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் தினமும் குறைந்து கொண்டே வந்தது. இதன் காரணமாக அதன் உடல் நிலை நாளுக்கு நாள் கவலைக்கிடமாகிக் கொண்டே வந்தது. ஃப்ளு காய்ச்சலுக்கான பாலும் வேலை செய்யவில்லை. பெண் குரங்கின் உடலில் அது கர்ப்பமாக இருப்பதற்கான எந்த அறிகுறியும் தெரிய வில்லை. பிரசவம் நேர்ந்ததற்கான எந்த ஒரு அறிகுறியும் காணப் படவில்லை. எனவே கண்ணன் எடுத்துச் சென்றது குரங்கு குட்டி தான் என்று உறுதியாக நம்ப முடியவில்லை. ஆனால் இக்குரங்குகளை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே அனைத்தும் மர்மமாகவே இருப்பதால் எதையும் தெளிவாக விளக்க முடியவில்லை.

இதற்கு மேல் அந்த புத்தகத்தில் அவர்களைப் பற்றிய செய்திகள் எதுவும் இல்லை. பெய்லி அவன் நின்று கொண்டிருந்த இடத்தில் இல்லை. ஓடையின் மறு கரை இன்னும் இருளாகவே இருந்தது. இவ்வளவு நேரமாகியும் பசி எடுக்காதது ஆச்சர்யமாக இருந்தது. இந்த தீவில் இருந்து தப்பிக்க ஏதாவது வழி இருக்குமா என்று தெரிந்து கொள்ள தீவைச் சுற்றி வட்டமிட்டேன். எல்லா இடத்திலும் சிறு சிறு செடி கொடிகள் அடர்ந்து இருந்தன. தப்பித்து செல்ல எதாவது கிடைக்குமா என்று அலசி ஆராய்ந்தேன். ஒன்றும் புலப்படவில்லை.

சூரியன் அஸ்தமனம் ஆகும் நேரம் நெருங்கியது. திடீரென்று நிலம் அதிரத் தொடங்கியது. ஓடையில் இருந்தது பெரும் இரைச்சலுடன் கண்ணாடி தகடுகள் மேலெழும்பின. கண்ணாடி எழும்பிய வேகத்தில் நீர் அதிக வேகத்துடன் வெகு தூரத்திற்கு சிதறி விழுந்தது. திடீரென்று பிரகாசம் அதிகம் ஆகியது. பயத்தில் நான் பின் வாங்கினேன். இரைச்சல் குறைந்தது. ஆனால் இது என்ன சத்தம். சித்ராங்கதாவின் வண்டி ஹாரன் சத்தம். திரும்பினேன். சித்ராங்கதா இல்லை. அவள் வண்டி மட்டும் நின்று கொண்டு இருந்தது. வேகமாக வண்டியில் ஏறி அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்தேன். வண்டி நகர ஆரம்பித்தது. வேகமாக நகர்ந்து ஓடை அருகே சென்ற போது வண்டி கண்ணாடியில் முட்டி நின்று போனது.

கண்ணாடிக்கூண்டுக்குள் அடைக்கப் பட்டுவிட்டேன். யாரோ என்னை சிறை எடுக்கிறார்கள் என்று புரிந்தது. கூண்டுக்குள் மின் விளக்கு வெளிச்சம் பரவியது. என்னைச் சுற்றி இருந்த சூழல் மாறியது. சில நொடிகளில் ஏதோ ஒரு நவீன ஆய்வுக் கூடத்தின் உள்ளே இருப்பது போல் ஒரு உணர்வு தோன்றியது. நான் அமர்ந்து இருந்த வண்டி உறுமத் தொடங்கியது. அக்சிலடேரை முருக்கியதும்.. அதி வேகத்துடன் கூண்டு மேல் நோக்கி சென்றது. பின் சீரான வேகத்தில் பயணிக்கத் தொடங்கியது. கீழே ஒரு குளம் பெரிய கல் ஒன்று விழுந்தது போல் ததும்பிக் கொண்டு இருந்தது. வேறு எதுவும் இருளில் தெரியவில்லை. எங்கு செல்கிறோம் என்று தெரியாமலே எனது மூன்றாவது பயணம் ஆரம்பமாகியது. ... (தொடரும்)...

Sunday, November 22, 2009

புத்தகம் புகுந்த கதை - 3

ஆராய்ச்சிக் கூடத்தின் மையப் பகுதி இருபத்து நான்கு மணி நேரமும் காமெராவினால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. காமெராவின் கேசட் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றப்படும். மே மாதம் 22 ஆம் தேதி காலை 4 மணிக்கு புதிய கேசட் மாற்றப்பட்டு ஓடிக் கொண்டு இருந்தது. 4:10 க்கு ஏதோ ஒரு மோட்டார் வாகனத்தின் சத்தத்தை தொடர்ந்து சித்ராங்கதா ஹரி என்னும் கால்கரி பல்கலைக்கழக மாணவி உள்ளே நுழைகிறார். அவரைத் தொடர்ந்து அதே பல்கலைக் கழக மாணவர் கண்ணன் வாசுதேவனும் உள்ளே நுழைகிறார். அந்தப் பெண் நேராக அந்தக் குரங்குகள் அடைக்கப் பட்டிருக்கும் கூண்டை நோக்கி செல்கிறாள். அதன்பின் கேசட்டில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக நடந்தவை எதுவும் பதிவாகவில்லை.

"ஒரே இருட்டு. மூன்றாக மடிக்கப்பட்டு இருந்த உடல் மெல்ல விரியத் தொடங்குகிறது. மூச்சு அடைக்கின்றது. என்னை மூழ்கடித்திருந்த நீரின் மட்டம் படிப் படியாக குறையத் தொடங்கியது. என் உடல் உந்தி வெளிய தள்ளப் பட்டது. எனக்கு அழ வேண்டும் என்று தோன்றியது. நான் அழத் தொடங்கினேன்."

சரியாக ஆறு மணிக்கு அடுத்த கேசட் பதிவு செய்யும் நேரத்தில் அந்தப் பெண் அங்கில்லை. கண்ணன் மட்டும் தன் கையில் ஒரு துணிப் பொட்டலத்தை எடுத்துக் கொண்டு கூடத்தை விட்டு வெளியேறுகின்றான். ஆனால் ஆராய்ச்சிக் கூடத்தின் எந்தப் பொருட்களும் களவாடப் படவில்லை.

ஆராய்ச்சிக் கூடத்தை சோதனை செய்த போது அவர்களின் கை ரேகைகள் மட்டும் சிக்கின. கமெராவில் கண்ட அடையாள அட்டையை வைத்துக் கொண்டு விசாரித்ததில் கால்கரி பல்கலைக்கழகத்தில் அவர்கள் இருவரும் படிக்க வில்லை என்பதும் அவர்களின் அடையாள எண் உண்மையானது அல்ல என்றும் கண்டறியப் பட்டது. அவர்கள் யாரென்று தொடர்ந்து விசாரணை நடை பெற்று வருகின்றது

இந்த சம்பவத்திற்குப் பிறகு பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. அந்தக் குரங்குகளின் சிறப்பு அம்சங்கள் மறைந்திருந்தன. அவை ஒலி எழுப்பும் சக்தி இழந்திருந்தன. பார்ப்பதற்கும் சாதாரண சிம்பன்சி குரங்குகளை ஒத்திருந்தன. இரு குரங்குகளின் கண்களும் மஞ்சள் நிறம் படர்ந்து மங்கி இருந்தன. பின்னர் அவற்றின் ஜீன்களை ஆராய்ந்த போது சாதாரண சிம்பன்சியிடமிருந்து அவை எந்த அளவிலும் உயர்ந்தது என்று படவில்லை. துரதிர்ஷ்ட வசமாக அக்குரங்குகளிடம் இருந்து எடுத்து வைக்கப் பட்டு இருந்த உரோமங்களும், குருதி மாதிரியும் காணாமல் போய் இருந்தன.

இதை விடவும் திடுக்கிடும் மாற்றங்கள் அவற்றின் உடலில் நிகழ்ந்திருந்தன. அவை...

புத்தகம் புகுந்த கதை - 2

இந்த சிம்பன்சிகள் மனித உருவத்திற்கு மிகவும் நெருங்கிய வடிவினதாய், ஒரு குறிப்பிட்ட சங்கேத மொழி பேசும் தன்மை கொண்டனவாய் இருந்தன. இவற்றின் ஜீன் கூறுகளை ஆராய்ந்து அறிவது மனித ஜினோம் ஆராய்ச்சியின் மைல்கல் என உணர்ந்த ஆராய்ச்சிக் கூடத்தினர் தலைமையகத்திற்கு இதைப் பற்றிய தகவல்கள் அடங்கிய கோப்பு ஒன்றை அனுப்பி வைத்தனர். இந்த குரங்குகளின் குருதி மாதிரிகளும், உரோமங்களும் ஆராய்ச்சிக்கென தனியே எடுக்கப் பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன.

இந்தக் குரங்குகளின் பிறப்பிடம் தொடர்ந்து சர்சைக்குள்ளன விஷயமாகவே இருந்து வந்தன. முதலில் ஆப்ரிக்காவில் இருந்து வரும் கப்பல்கள் ஏதேனும் ஒன்றில் இவை வந்து இருக்கலாம் என்று கருதப் பட்டு வந்தது. ஆனால் பின்னர் நடந்த ஆராய்ச்சியின் முடிவுகள் சிறிது சந்தேகத்தைக் கிளப்பின. ஆண் குரங்கின் இரத்தத்தை பரிசோதனை செய்த பொது அது ஒரு பெயரிடப்படாத ஃப்ளு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இந்த காய்ச்சலுக்கான கிருமிகள் பற்றி மெடிக்கல் கவுன்சிலில் விசாரித்ததில் இது மத்திய அமெரிக்காவில் மிருகங்களிடம் எட்டு வருடங்களுக்கு முன் பரவி வந்த புதிய வகை காய்ச்சலுக்கான கிருமிகளுடன் ஒத்துப் போனது தெரிய வந்தது. இதன் மூலம் இவை அப்பகுதியில் வாழ்ந்து இருக்கக் கூடும் என சந்தேகம் கிளம்பியது.

இந்த நோயால் பதிக்கப் பட்ட விலங்குகள் கூட்டம் கூட்டமாக இறந்ததும் பின் எல் சல்வடார் அரசின் தலையீட்டால் பல விலங்குகள் குணப்படுத்தப் பட்டதும் தெரிய வந்தது. இந்த ஆண் குரங்கு அப்போதில் இருந்தே இந்த கிருமியால் பதிக்கப் பட்டிருந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். ஆனால் இதனால் இந்த குரங்குக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அபாரமாய் இருந்தது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியது. இதன் பின்னர் பெண் குரங்கை ஆராய்ந்ததில் எவ்வித கிருமி தக்குதலுக்குண்டான அறிகுறியும் தெரியவில்லை. ஆனால் அது கர்ப்பமாக இருந்த விஷயம் வெளிப்பட்டது. மேலும் மேலும் வெளிப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் அதிசயத்தைக் கொடுத்துக்கொண்டு இருந்த வேளையில் ஆராய்ச்சிக் கூடத்தினர் தலைமையகத்தின் முடிவுக்காக காத்துக் கொண்டிருந்தனர்.

இந்த சமயத்தில் தான் புத்தகத்தின் முகப்பில் காணப்படும் இருவரும் சம்பவ தினத்தன்று ஆராய்ச்சிக் கூடத்தில் நுழைந்தனர். அன்று ஏற்பட்ட நிகழ்வைப் பற்றிய குற்றப் புலனாய்வு துறை சமர்ப்பித்த அறிக்கையிலிருந்து....