Thursday, December 31, 2009

புத்தகம் புகுந்த கதை - 10

'வெளி'யிலிருந்து "விண்கலம் புகார் நகரத்துக்குள் நுழைந்து விட்டது. ஆனால் தரை இறங்குவதற்கு அனுமதி கிடைக்க இன்னும் சில நேரம் பிடிக்கும். அதுவரை புகார் நகரைச் சுற்றிப் பார்க்க விரும்பினால் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும். விருப்பமா?".. "நன்றி.. கண்டிப்பாக..யப்.. பூ..! "

ஒரு குதிரையின் மீது அமர்ந்து கொண்டு இருந்தேன். தீப்பந்தங்களால் ஒளியூட்டப்பட்ட சாலை அது. சாலைகளில் தென்னை மாவிலை தோரணங்கள் கட்டப் பட்டு இருந்தன. கமகமவென்று சந்தன வாசம் வீசிக் கொண்டு இருந்தது. ஊரின் ஒரு மூலையில் இருந்து மேல தாள வாத்தியங்கள் முழங்கிக் கொண்டு இருந்தன. மேலே என்ன? எதோ ஒரு பறக்கும் தட்டு? வளையல் ஓசையைத் தொடர்ந்து பெண்களின் சிரிப்பொலி கேட்டது. தூரத்தில் பெண்கள் சிலர் வந்து கொண்டு இருந்தனர். நடுவில் ஒரு இளம்பெண் மிகையான அலங்காரங்களுடன் வந்து கொண்டு இருந்தாள். ஆபரணங்கள் அதிகமாய் மறைத்த அங்கம், குழல் மறைத்த பாதிமுகம், கருப்பு என்று சொல்லிவிட முடியாத சற்றே வெளுத்த நிறம். தொலைவில் வருவதால் முகத்தை சரியாக பார்க்க முடியவில்லை. குதிரையை விரட்டி அவர்களை நெருங்கினேன். மங்களகரமான முகம், அழகானதா? சொல்ல முடியவில்லை.. ஆனால் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வதனம்.. ஆனால் யாரையும் கண்டு கொள்ளாத பாவம். திமிரா? இருக்காது..ஆனால் அந்த பாவம் அவளை அழகியாக்கியிருந்தது. "எக்ஸ்..சாரி.."

குதிரை பின்பக்கமாக நகர ஆரம்பித்தது. வேகமாக பின்புறம் ஓடியது. சாலை முன்புறம் நகர்ந்தது. குதிரை மறைந்தது. நின்று கொண்டு இருந்தேன். ஆனாலும் சாலை முன்புறம் அதிக வேகத்தில் நகர்ந்து கொண்டு தான் இருந்தது. நகரம் மறைய ஆரம்பித்தது. மறுபடியும் விண்கலத்தில்.. "ஸா..மன்னிக்கவும்.. தமிழில் பேச வேண்டும் என்பதை மறந்து விட்டேன்.." "பரவாயில்லை.. உங்களைத் திரும்ப அழைத்தது அதற்காக அல்ல.. தரை இறங்க அனுமதி கிடைத்து விட்டது." 'இயந்திரம் என்பது சரியாகத்தான் இருக்கிறது' நினைத்தேன். "மன்னிக்கவும். பல வாகனங்கள் வரிசையில் நிற்பதால் இப்பொழுது விட்டால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி வரும். உங்களுக்காக சிறப்பு அனுமதி பெற்று வாங்கிய கால இடைவெளிக்குள் சேர்ப்பிக்க வேண்டிய கடமை வாகனங்களுக்கு இருக்கிறது."

தரை இறங்கிய பின் வெளியே.. "பின்னால் திரும்பி இடக்கையை மேல்நோக்கி கீழேயும், வலக்கையை கீழ்நோக்கி மேலேயும் வைத்து.. இரு கைகளையும் அமுக்குவது போல் இணையுங்கள்." செய்தேன். விண்கலம் மறைந்தது. திரும்பினேன். "கதவைத் திறந்து வெளியே சென்று, காத்திருக்கவும்.." என்று மீண்டும் அதே அசரீரி.

காத்திருக்கும் அறையில்.. எக்கச் சக்கமான நபர்கள் காத்து இருந்தார்கள். "இந்திரவிழா அல்லவா? அதான் இத்தனை கூட்டம்" அருகில் இருந்தவர் தமிழில். "விழாக் காலங்களுக்கு இன்னும் சில படகுகளை சேர்த்திருக்கலாம். இந்த அரசாங்கம் என்று தான் ஒழுங்காக செயல்படுமோ. யாரோ முக்கிய நபர் வருகிறார் என்று பல வின்கலன்களைக் காக்க வைத்து விட்டார்கள்." "இந்திரசேனன் அழியாப்புலத்திலிருந்து".. அழைத்தார்கள். "எங்கிருந்து வருகிறீர்கள்" எனக் கேட்டார் அவர். 'உரோமாபுரி என்றா சொல்வது.. ' யோசித்துக் கொண்டு இருக்கும் போதே.. ஒரு பெண் வந்து "இந்திரசேனரே.. உங்களைத் தான் அழைக்கிறார்கள்".. "தலைநகரத்தில் இருந்து தான் வருகிறீர்களா?" என்றார் அவர். "ம்" தலையை எல்லா திசையிலும் அசைத்தேன்.

அந்த பெண் அழைத்து சென்று "இங்கே கை வையுங்கள்" என்றாள். ஒரு சிறிய ஒளியூட்டப்பட்ட பலகை அது. வைத்தேன். இந்திரசேனன் வெகு வேகமாக என்னில் இருந்து தூக்கி எறியப்பட்டான். நான் காணாமல் போய் இருந்தேன்.. இல்லை இருந்தது. ... (அடுத்த பாகத்தில் தொடரும்)...

Monday, December 28, 2009

புத்தகம் புகுந்த கதை - 9

மாயர்களின் சோதிடக் கணிப்புகள் உங்களை "மஹா" என்றே குறிப்பிடுகின்றன. அது ஏதோ ஒரு சங்கேதப் பெயர் அல்லது அடைமொழியாக இருக்கலாம். உங்களைப் பற்றிய ரகசியங்கள் எங்களுக்கு புரிந்து விடக் கூடாது என்பதர்க்கென்றே உருவாக்கப் பட்ட பெயர் என்று தெரிகின்றது. இந்தப் பெயர் நம்மவர்களில் அனைவருக்கும் பரிச்சியமான பெயர் என்பதாலும், நீங்கள் வரும் சமயம் இது என்று பலரும் எதிர்பார்ப்பதாலும் உங்களின் பாதுகாப்பு கருதி உங்களின் பெயர் "இந்திரசேனன்" என்று மாற்றப்பட்டது. புகாரின் பெருவாரியான மக்களுக்கு உங்களைப் பற்றிய தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆயினும் "நீங்கள் தான் மஹா" என்று அவர்களுக்கு தெரியப் படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறீர்கள். புகாரில் நீங்கள் பெருவணிகன் புரந்தரனின் தம்பி என்று அறிமுகம் செய்து கொள்ளுங்கள். நீங்கள் இது நாள் வரை உரோமாபுரியில் குருகுல வாசத்தில் இருந்ததாக சொல்லிக் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் பூம்புகாரின் வரலாற்றை தெரிந்து கொள்வது மிக அவசியம்.

சினரம் என்னும் நாட்டை செம்பியன் என்னும் மன்னன் ஆட்சி செய்து வந்தான். வள்ளன்மையில் தன்னிகர் இல்லாதவன் என்னும் பெயர் கொண்டு வாழ்ந்து வந்தான். வேதங்களில் கூறப்பட்டுள்ள நூறு விதமான யாகங்களும் செய்து இந்திரனுக்கு நிகரானவனானான். ஒரு நாள் அவன் அரசவையில் இருக்கும் பொது ஒரு புறாவானது பருந்திடம் இருந்து அடைக்கலம் தேடி அவன் மடி புகுந்தது. அடைக்கலம் புகுந்த புறாவைக் காப்பாற்றி, பருந்தின் பசிக்கு தன் தொடைக்கறியை உணவாகக் கொடுத்தான். அவன் செயலைப் பார்த்த இந்திரன் அவன் நாடு மழை வளனுடன் செல்வச் செழிப்பும் பெற்று விளங்குமாறு வரமருளிச் சென்றான். இந்திரனின் வரத்தால் நாடு எல்லா வளங்களுடனும் செழிப்புற இருந்தது. எனவே இந்திரனுக்கு தன் நன்றியைத் தெரிவிக்கும் வண்ணம் இந்திரனுக்கு விழா எடுக்க விரும்பினான். மேலும் வளங்களின் அரசனான இந்திரன் தன் நாட்டிலேயே இருந்தால் தன் நாட்டுக்கு எவ்வித குறையும் வராது என்று நம்பிய செம்பியன் கடற்கரையோரம் இந்திரனின் இருப்பிடமான அமராவதிக்கு இணையான நகர் ஒன்றை நிர்மாணித்தான். அதை அமராவதி என்றே பெயரிட்டு அழைத்தான். மண்ணகத்து வான்பதி என்று பின்னாளில் அழைக்கப் பட்ட அந்த மூதூர் தான் பூம்புகார்.

அதன் பின் செம்பியன் வழி வந்த சோழ மன்னர்கள் அந்நகரைப் போற்றிப் பாதுகாத்து மேலும் எழிலுறும் வண்ணம் வானுயர் மாடங்கள் எழுப்பினர். கரிகால் சோழனின் காலத்தில் தலைநகர் ஆன பின்னும் கூட இந்திரா விழா தொடர்ந்து எடுப்பிக்கப் பட்டு வந்தது. பின்னர் "வாகைச்சென்னி" என்னும் மன்னன் காலத்தில் தொடர்ச்சியாக இருபது வருடங்கள் இந்திரா விழா எடுக்காத காரணத்தால் இந்திரனால் அழிக்கப்பட்டதாக கருதப்பட்டது. நாம் செல்ல விருக்கும் புகார் அழிக்கப்பட்ட பூம்புகார் நகரத்தைப் போன்றே வடிவமைக்கப் பட்டது. மேலும் நகரின் பழமையைக் காக்கும் பொருட்டு நவீனத்தின் அடிச் சுவடே தெரியாத வண்ணம் தலைநகரத்திற்கு வெகு தொலைவில் அமைக்கப் பட்டு உள்ளது. பழைய புகார் நகரத்தின் அனைத்து அம்சங்களுடனும் அமைக்கப் பட்டுள்ளது. இது குறித்தும் நீங்கள் அந்நகர மக்களிடம் எதுவும் கூற வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறீர்கள்.

உங்கள் உடை மற்றும் பேசும் மொழி ஆகியவை இந்த நகருக்கு ஏற்றார்போல் நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். அத்துடன் புகார் நகரத்தில் நுழையும் போது உங்களுள் ஒரு மாற்றம் ஏற்படும். வெளி ஆட்கள் நகரில் நுழையும் போது ஏற்படும் இயல்பானதொரு மாற்றம் எனவே பயம் கொள்ளத் தேவையில்லை. இது இந்த நகரத்தின் பாதுகாப்புக்காக "மாயன்" பிரகலாதனால் ஏற்படுத்தப் பட்டது. அப்பொழுது.. (தொடரும்)....

Sunday, December 20, 2009

புத்தகம் புகுந்த கதை - 8

டைசியா மற்றும் அவள் துணையும் எதிரி நாட்டைச் சார்ந்தவர்கள். இவர்கள் கீழ்த் திசையில் உள்ள மாய இனத்தைச் சார்ந்தவர்கள், பெரும்பாலும் சிங்கம் அல்லது குரங்குகளின் உருவில் அறியப்பட்டாலும் பெரும்பாலானவர்கள் மனிதர்களின் கலப்பால் மனித உருவத்தையும் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் பேசும் மாய மொழி இன்றளவும் சங்கேதக் குறி நிபுணர்களால் விடுவிக்க முடியாத ஒரு அதிசய மொழி ஆகும். விஞ்ஞான தொழில் நுட்பத்தில் கை தேர்ந்தவர்கள். நம்மை விடவும் புத்திசாலிகள். புத்திசாலிகளுக்கே உரித்தான வித்தியாசக் குணங்களால் அவர்களால் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் அதிலும் முக்கியமாக ஒற்றுமையுடனும் வாழ முடியவில்லை. தங்கள் திறமைக்கு ஏற்ற வாழ்க்கை தங்களுக்கு அமையவில்லை என்ற குறை உடையவர்கள். இதன் பொருட்டே நம்மீது பொறாமை உணர்வு கொண்டு பகைமை பாராட்டி வருகிறார்கள். ஆயினும் மாய இனத்தவர்களிடையே ஒரு சில நல்லவர்களும் இருந்தார்கள். அவர்களின் உதவியால் மட்டுமே நாம் இந்த அளவு வளர்ச்சி காண முடிந்தது. இதற்கு கைமாறாக நாம் அவர்களுக்குக் கொடுத்தது மாயர்களுக்கு இன்றளவும் கிடைக்காத நிம்மதி.

ஆய்வகத்தில் இருந்த இரு குரங்குகளுக்கும் இவர்களுக்கும் உள்ள உறவு இது வரை கண்டு பிடிக்கப் படவில்லை. மேலும் கண்ணன், சித்ராங்கதா மற்றும் அந்த ஆய்வகக் குரங்குகளும் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் அனைவரும் இறந்து போனதற்கான சாட்சியங்கள் நமக்கு பல வருடங்களாகவே வந்த வண்ணம் உள்ளன. நம்முடைய அடுத்த அரசன் இது வரை யார் என்றே தெரியாத நிலையில் அவரைக் கொல்வதர்க்கென்றே மாயர்களால் உருவாக்கம் செய்யப்பட்டவன் பெய்லீ. அவனே மாயர்களின் கணிப்புகள்(ஜோதிடங்கள்) பலவற்றிலும் இடம் பெறுகின்றான். நமக்கு கிடைத்த மிகச் சில குறிப்புகளை மிகுந்த முயற்சியுடன் ஆராய்ந்ததில் உங்களைப் பற்றிய குறிப்புகள் கிடைத்தன.

அனால் உங்களைக் கண்டறிவதில் பல சிரமங்கள் இருந்தன. மாயர்களின் குறிப்பு படி கண்ணன் அல்லது சித்ராங்கதா அறிமுகமான மூன்று நாட்களில் நீங்கள் பெய்லீயை சந்தித்து விட்டு இங்கு வந்து சேர்வீர்கள். ஆனால் இது வரை நீங்கள் இருவரில் யாரையும் நேரில் சந்திக்காததால் நீங்கள் இந்த சமயத்தில் வருவீர்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் கண்ணனின் புகைப்படம் மூலம் ஏற்பட்ட அறிமுகமே போதுமானது என்ற கோணத்தில் நாங்கள் எண்ணவில்லை. நாங்கள் இன்னும் குறைந்தது ஒரு மாத காலம் ஆகும் என்றே நினைத்திருந்தோம்.

மாயர்களின் மேதாவித்தனம் மரபு சார்ந்தது. மிகவும் புத்திசாலிகளான மாயர்களே மன்னர் ஆகின்றனர். குறிப்புகளின் படி பெய்லீ மாயர்களின் மன்னர் வழி வந்தவன். அவன் தந்தை மன்னன் என்று அறியப்படவில்லை என்றாலும் அவன் மறுசுழற்சி நாளுக்குள் மன்னன் ஆவான் என்று நம் கணிப்புகள் உரைக்கின்றன. ஆயினும் மறுசுழற்சி நாள் வரை அவன் எந்த படையெடுப்பும் மேற்கொள்வதாக நம்மவர்களின் கணிப்பில் இல்லை. மாயர்களுக்கு மறுசுழற்சி நாள் என்ற ஒன்று கிடையாது என்பதால் அவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அதற்கப்பாலும் கணிக்கப்பட்டு உள்ளன. ஆனால் நம் கணிப்புகள் யாவும் அந்த நாளுடன் முடிவுறுகின்றன. (தொடரும்)...

Sunday, December 13, 2009

புத்தகம் புகுந்த கதை - 7

விண்கலம் கிளம்பிற்று அதிவேகமாக. "யார் இந்த புரந்தரன்?" என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போதே "விண்கலம் விண்வெளி தகவல் மையத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு விட்டது. இனி விண்வெளியின் கால நியதிகள் பின்பற்றப் படும்" என்று விண்கலத்தின் ஒரு பிரதான 'வெளி'யில் இருந்து சத்தம் வந்தது. அது மேலும் "முன்பே குறிப்பிட்ட இலக்கான பழம் பெருநகர் பூம்புகார் நோக்கி விண்கலம் பயணித்துக்கொண்டு இருக்கிறது. மாற்றம் ஏதாவது இருப்பின் தெரிவிக்கலாம்."

'புரந்தரன் தான் இலக்கை நிர்ணயித்திருக்க வேண்டும்'. "ம்ம்.. மாற்றம் ஏதும் இல்லை. செல்லும் பாதையின் வரைபடம் எதாவது இருக்கிறதா?" "உள்ளது. உங்களுக்காக இதோ இங்கே. வார்த்தையால் ஆன இடைமுகம் வேண்டாமெனில் நிறுத்திக் கொள்ளவும். தலைநகரத்தில் இருந்து பூம்புகார் செல்லும் பாதையில் மேரு மலையின் முடிவில் வரும் கன்னல் கடலைக் கடந்து ஜம்புநாடு வருகின்றது. ஜம்புநாட்டின் முக்கிய நகரங்களான கபாடபுரம், பாண்டிய நாட்டின் கூடல் மா மதுரை, சித்திரக்கூடம் நகரங்களைக் கடந்து, சோழரின் புகார் நகரை அடைகின்றோம். சித்திரம் வழியான இடைமுகம் வலது புறம் உள்ள திரையில் தொடர்ந்து காண்பிக்கப் படும். புகார் புவியின் கால நியதிப்படி இன்னும் இரண்டு மணி நேர பயணத் தொலைவில் இருக்கின்றது".

ஒலி வடிவான இடைமுகத்தை நிறுத்தி விட்டு, 'என்னிடமே அனைத்து தகவல்களும் பதிவாக்கம் செய்யப் பட்டு தரப் பட்டுள்ளது' என்றால் 'எதில்? இந்த விண்வெளிக் கலத்திலா?' மறுபடியும் ஏதோ திரையில் படம் தோன்ற ஆரம்பித்தது அதை பார்க்க விரும்பாமல் வேறு திசையில் திரும்பிக்கொண்டேன். 'இவன் யார் எனக்கு பெயர் வைக்க? மகாவாம் இந்திரசேனனாம்? என் பெயரை மாற்றியதோடு இல்லாமல் என் அம்மா பெயரையும் 'அதிதி' என்று. ஆம் அவன் என்ன மொழி பேசினான்? எனக்கு தமிழ் ஆங்கிலம் தவிர வேறு மொழி எதுவும் தெரியாதே? எப்படி அதை புரிந்து கொண்டேன்? சித்ராங்கதா, டைசியா, பெய்லீ இவர்களுக்கும் கண்ணனுக்கும் என்ன சம்பந்தம்? கண்ணன் உயிரோடு இருக்கிறாரா? என்னை அழைத்து வந்தது கண்ணன் தானா? இந்தப் புத்தகத்தை ஒரு நொடியில் எப்படி படித்தார் புரந்தரன்?' புத்தகத்தின் முதல் பக்கத்தைத் திறந்தேன். எழுத்துக்கள் வரி வரியாக தோன்ற ஆரம்பித்தன.

"நீங்கள் செல்ல வேண்டிய நகர் பூம்புகார். இந்திர விழாவின் முந்தைய தினத்தில் அங்கு போய் சேருவீர்கள். பதினேழாம் நாள் புரந்தரன் உங்களை சந்திப்பார். நீங்கள் அங்கு இருபத்து எட்டு நாட்கள் தங்கி இருப்பீர்கள். உங்களுக்கு மறு சுழற்சி நாள் வரை எந்த பிரச்சனையும் வராது. அதன் பின் உங்களுக்கு பெய்லீயால் ஏதேனும் ஆபத்து நிகழலாம். அதில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்க்கான பயிற்சிகள் அனைத்தும் உங்களுக்கு வழங்கப் படும். மறுசுழற்சி நாள் வரையில் ஆன சம்பவங்கள் அனைத்தும் கணிக்கப் பட்டு வைக்கப் பட்டு உள்ளன. எனவே கடந்த கால, நிகழ்கால மற்றும் மறுசுழற்சி நாள் வரையிலான எதிர்கால நிகழ்வுகளும் உங்களுக்கு மறு சுழற்சி நாளுக்குள் தெரிவிக்கப் படும். ஆனால் இந்த மறு சுழற்சி நாள் வெகு தொலைவில் இல்லை..
அது 2012 டிசம்பர் 22 ஆம் தேதி நள்ளிரவு ... (தொடரும்)...

Thursday, December 3, 2009

புத்தகம் புகுந்த கதை - 6

மறுபடியும் வேறு ஏதோ ஒரு குளத்தில் அதே கல் விழுந்தது. கூண்டு திறந்தது. இந்த முறை குளத்தின் நீர் சிவப்பாக இல்லை. என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ளும் முன்னரே நான்கைந்து நபர்கள் உள்ளே நுழைந்தனர். "வணக்கம். உங்கள் முன் நிற்பவன் இந்நகரின் தலைவன், பெயர் புரந்தரன். உங்களுக்கு தமையன் முறையினன்" என்று அறிமுகம் செய்து கொண்டான். "தமயன்? அண்ணனா? நீங்க ஏதோ தப்பா புரிஞ்சிட்டிருக்கீங்க?" முடிப்பதற்குள் தடுத்து "மஹா.. உங்களுக்கு சந்தேகம் இருப்பின் இவரைச் சந்தியுங்கள். உங்களை இது நாள் வரை பராமரித்து வந்தவர், அதிதி. உங்கள் வரவை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறார்" என்று ஒரு படத்தைக் காட்டினார். "புரந்தரன்.. எனக்கு விளக்கமா சொல்லுங்க. இது என்ன இடம்?"

"எதையும் பேசுவதற்கு இது சமயமோ இடமோ அல்ல. உங்களுக்கு போக போக எல்லாம் தெரிய வரும்". மற்றவர்கள் பக்கம் திரும்பி "சித்ராங்கதாவின் உடல் கிடைத்ததா? வேறு ஏதேனும் தடயங்கள்?".

சித்ராங்கதாவின் உடல் தூக்கி வரப்பட்டது. புரந்தரன் அவள் கோட் பையில் இருந்து சில பொருட்களை எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு "சரி வெளியில் நில்லுங்கள். உடலை தகுந்த மரியாதையுடன் அப்புறப்படுத்தி விடுங்கள். முன்னர் கூறியவை அனைத்தும் இன்னும் சிறிது நேரத்தில் தயாராக இருக்க வேண்டும்" என்று அவர்களுக்கு கட்டளையிட்டான் வேறு ஏதோ மொழியில் .

"மஹா உங்களுக்கு இந்த மொழி நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்" என்று கூர்மையாக பார்த்து விட்டு பின் அதே மொழியில் தொடர்ந்தார் "உங்கள் நிலை புரிகின்றது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதை விட உங்களுக்கு என்ன நேர்ந்தது என்று தெரிந்து கொள்வது அவசியம். சொல்லுங்கள் கண்ணனின் வாகனத்தில் ஏறியதில் இருந்து விண்கலம் இங்கு வந்து சேரும் வரை நடந்த அனைத்தையும் சொல்லுங்கள்".

கதையை ஓரிரு நொடிகளில் (!?) சொல்லி முடித்ததும் "டைசியா மற்றும் பெய்லீ. எல்லாம் தெரிந்திருக்கிறார்கள். பொருத்தமான பெயர். அவன் பெயர் குறிப்பிடப் படவில்லை. அந்தப் புத்தகம் இது தானே?" என்று அந்த புத்தகத்தை கையில் எடுத்தார். அவர் கழுத்தில் உள்ள அட்டிகையின் நடுவில் உள்ள பச்சைக்கல் மினுங்கியது. அந்த புத்தகத்தை திறக்காமலே திருப்பிக் கொடுத்துவிட்டு "எல்லாம் தெரிந்த கதை. மன்னிக்கவும் உங்கள் உடை நேரமின்மை காரணமாக உங்கள் அனுமதியின்றி மாற்றப் பட்டு இருக்கின்றது . சீக்கிரம் வாருங்கள் உங்கள் விண்கலம் புறப்படத் தயாராய் இருக்கிறது."

இந்த தீவின் அருகிலேயே இருந்த மற்றொரு தீவில் "இந்திரசேனரே.. இந்த வாகனம் உங்களுக்காகவே வடிவமைக்கப் பட்டது, உங்களுடையது . உங்களுக்கு தெரிய வேண்டியவை அனைத்தும் பதிவாக்கம் செய்யப்பட்டு உங்களிடமே கொடுக்கப் பட்டுள்ளது. தேவைப்படும் போது நீங்களே தேடித் தெளிந்து கொள்ளலாம். மீண்டும் புகாரில் இந்திரா விழாவின் பதினேழாம் நாள் சந்திப்போம் . நன்றி" புரந்தரன் விடை பெற்றார். வாகனம் கிளம்ப அனுமதி கோரியது. "சரி கிளம்பலாம்".... (தொடரும்)