Monday, August 3, 2009

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைத் தூற்றுதும் திங்களைத் தூற்றுதும் - 9

நீர். வாழ்வின் ஜீவாதாரம். எதையும் கரைக்க வல்லது, கல் நெஞ்சக்காரர்களின் மனதைத் தவிர. வீரியம் ஆனவை நீரில் கரையும் போது நீர்த்துப் போகின்றன. வீரியமற்றவை நீரில் கரையும் போது நீர் அப்பொருளின் கரிசல் ஆகின்றது. நெருப்பு பொருளின் தன்மை பார்த்து செயல்படாத தாய், ஆனால் நீர் பொருளின் தகுதி அறிந்து வழங்கும் குரு. எனவே நீரின் தன்மை என்று உரத்துச் சொல்வதற்கில்லை. வேதியியல் படி நீர் நிறம், மணம், சுவை அற்றது தனித்திருக்கையில். ஆனால் உலகில் எதுவும் தனித்து தன்னிச்சையாக இருக்க இயலாது.

கங்கை நதி விஷ்ணுவின் காலடியில், அரங்கனின் காலை வருடிச் செல்லும் காவிரியின் சகக் கிழத்தியாய், இருந்த புராண காலத்தில் பகீரதன் என்னும் மன்னன் வாழ்ந்து வந்தான். அவனே கங்கை விஷ்ணுவின் காலடியில் இருந்து சிவனின் தலைக்கு இடம் பெயரக் காரணமாய் இருந்தான். விஷ்ணுவின் காலடியில் இருந்த வரை மென்மையாய் இருந்தவள் சிவனின் தலைக்கு வந்ததும் உக்ரவதி ஆனாள். இந்த உக்கிரம் தலைக்கு வந்ததனால் வந்த தலைக் கனம் அன்று. தெய்வத்தின் அடி வருடி புண்ணியம் பெறுதலையே தொழிலாய்க் கொண்டவளுக்கு பாவிகளின் உடல் வருடி பாவத்தை சம்பாதிப்பது கொடூரமான அவஸ்தையாய் இருந்தது. அவள் மனம் அறிந்து மாதேவன், பாவிகளின் பாவங்கள் கங்கையால் நீர்த்துப் போகக் கடவது என்றும் புண்ணியர்களின் புண்ணியங்கள் கங்கை நீரின் வளமையால் வலுத்துப் போகக் கடவதேன்றும் அருளி கங்கையை புண்ணியம் மட்டுமே பெரும் புண்ணிய நதி ஆக்கினான்.

எதிர்பாராத சம்பவம் ஒன்று என் கண்ண முன்னே நடந்தது. எதை துரதிர்ஷ்டம் என எண்ணினேனோ அதுவே அதிர்ஷ்டமாய் முடிந்தது. அவனைத் தாக்குவதற்காக எறியப்பட்ட டார்ச் அவன் விலகியதால் பின்னால் இருந்த ஓடை நீரில் விழுந்தது. விழுந்த வேகத்தில் நீர்த் திவலைகள் காற்றில் சிதறின. ஒரு துளி அவன் மீது பட்டிருக்க வேண்டும். அவன் கூச்சல் போட்டுக் கொண்டே தன் நினைவின்றி இங்கும் அங்குமாய் ஓடி தவறி ஓடையிலே விழுந்து மேலும் துடித்துக்கொண்டே துடிப்படைக்கினான்.

"Dad". இது அந்தப் பொடியனின் குரல் தான். அவன் வருவதற்குள் நான் தப்பித்தாக வேண்டும். வேகமாக ஓடையை நோக்கி ஓடினேன். அவன் என் பின்னால் விரட்டிக் கொண்டு வந்தான். "Bailey!.. Dont go near him. Your life is much more important to us" என்று டைசியா கத்தியதும் மறு பேச்சில்லாமல் திரும்பி ஓடி விட்டான். நான் இதற்குள் ஓடைக்குள் இறங்கி விட்டிருந்தேன். ஒரு வழியாக பெரும் கண்டத்தில் தப்பித்த சந்தோஷத்தில் மறு கரை அடைந்தேன்.

பொழுது நன்கு இருட்டி இருந்தது. களைப்பு மிகுதியால் அங்கேயே படுத்து உறங்கி விட்டு இருந்தேன். நான் விழித்து எழுந்த போது நன்கு விடிந்திருந்தது. குளிர் குறைந்து வெயில் தன் வீரியத்தைக் கூட்டத் தொடங்கி இருந்தது. கண்களைக் கசக்கிய படியே திரும்பினால் அந்தப் பொடியன் பெய்லீ கும்மிருட்டில் (?!) கொலை வெறியோடு வெறித்துக் கொண்டிருந்தான்.. (தொடரும்)...

No comments: